Politics

அதானியை அடுத்து செபி தலைவரை பாதுகாப்பதில் பா.ஜ.க மும்முரம்! : செபியிலும் முறைகேடு என ஊழியர்கள் புகார்!

கடந்த ஆண்டு ஜனவரியில், ஒன்றிய பா.ஜ.க அரசின் தனியார்மயமாக்கலில் (privatization) முக்கிய பங்கு வகிக்கும் அதானி குழுமத்தில் நடக்கிற மோசடிகளை அம்பலப்படுத்தியது அமெரிக்க ஆய்வு நிறுவனமான Hindenburg.

அதன் பிறகு, பல்வேறு குற்றச்சாட்டுகள் அதானி குழுமத்தில் மேல் பாய்ந்தன. அக்குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் உரிமை, இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்திற்கு (SEBI) வழங்கப்பட்டது. ஆனால், ஓராண்டும் மேலான SEBI விசாரணையில், எவ்வித முன்னேற்றமும் இல்லாத சூழலே நிலவி வந்தது.

இந்நிலையில், SEBI அமைப்பின் தலைவரும், அதானி மோசடியில் பங்கு கொண்டவரே என்ற மற்றொரு குற்றச்சாட்டை, சான்றுகளுடன் வெளியிட்டது Hindenburg.

இதனால், SEBI தலைவர் மதாபி பூரி புச் மீதும் விசாரணை தேவை என எதிர்க்கட்சிகள் முன்மொழிந்தன. எனினும், ஒன்றிய பா.ஜ.க அரசு தனது அலட்சிய போக்கையே தொடர்ந்தது.

இச்சூழலில், SEBI தலைவர் மதாபி பூரி தலைமையில், SEBI நிறுவனத்திற்குள்ளும் பல மோசடிகள் நிகழ்ந்தன என்ற குற்றச்சாட்டை, சுமார் 500க்கும் மேற்பட்ட SEBI ஊழியர்கள் முன்வைத்துள்ளனர். அது குறித்த கடிதத்தையும், ஒன்றிய நிதித்துறைக்கும், SEBI ஊழியர்கள் அனுப்பியுள்ளனர்.

இது பற்றி மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தனது X சமூக வலைதளத்தில், “500 செபி ஊழியர்கள், செபி நிறுவனத்தில் நடக்கிற முறைகேடுகள் குறித்து புகார் அளித்துள்ளனர். அனால், அதானியை பாதுகாத்த செபி தலைவரை, எந்த எல்லைக்கும் சென்று மோடி பாதுகாப்பார் என்பது உறுதியே. மோடியின் ஊழல் ஆட்சியில் அனைத்து நிறுவனங்களும் சீர்கெட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.

இதனால், அதானியை போல் செபி தலைவரும் காக்கப்படுவார் என பல்வேறு குற்றச்சாட்டுகள், தேசிய அளவில் வலுக்கத்தொடங்கியுள்ளன.

Also Read: ”செபி தலைவரைக் காக்க மோடி எந்த எல்லைக்கும் செல்வார்” : பிரசாந்த் பூஷன் குற்றச்சாட்டு!