Politics

”செபி தலைவரைக் காக்க மோடி எந்த எல்லைக்கும் செல்வார்” : பிரசாந்த் பூஷன் குற்றச்சாட்டு!

பங்குச்சந்தை ஒழுங்குமுறை வாரியமான செபியின் தலைவராக இருக்கும் மாதபி புச், அதானி குழுமத்திற்கு சாதகமாக செயல்பட்ட அதிர்ச்சித்தகவல் அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் அறிக்கை மூலம் வெளியானது.

மேலும், மாதபி புச் செபியின் தலைவராவதற்கு முன் அதன் உறுப்பினராக இருந்த 2017 முதல் 2022 வரையிலான ஐந்தாண்டு காலத்தில் ஐசிஐசிஐ வங்கியிலும் மாதபி புச் ஊதியம் பெற்றதாக காங்கிரஸ் ஊடகப் பிரிவு தலைவர் பவன்கேரா பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

அதில், ”ஐந்தாண்டு காலத்தில் மாதபி புச் 16 கோடியே 80 லட்சம் ரூபாயை ஐசிஐசிஐ வங்கியிலிருந்து ஊதியமாக பெற்றுள்ளார் ஐசிஐசிஐ தெரிவித்துள்ளது. மாதபி புச், விருப்ப ஓய்வு பெற்ற பிறகு ஆண்டுக்கு 2 கோடியே 77 லட்சம் ரூபாயை ஓய்வூதியப் பலனாக ஐசிஐசிஐ வங்கி எப்படி வழங்கியது?” என பவன்கேரா கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும், இந்த குற்றச்சாட்டுகளுக்கு செபி பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்நிலையில், செபி தலைவரைக் காக்க மோடி எந்த எல்லைக்கும் செல்வார் என மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் குற்றம்சாட்டியுள்ளார். அவரது சமூகவலைதள பதிவில்,”500 செபி ஊழியர்கள், செபி நிறுவனத்தில் நடக்கிற முறைகேடுகள் குறித்து புகார் அளித்துள்ளனர். அனால், அதானியை பாதுகாத்த செபி தலைவரை, எந்த எல்லைக்கும் சென்று மோடி பாதுகாப்பார் என்பது உறுதியே. மோடியின் ஊழல் ஆட்சியில் அனைத்து நிறுவனங்களும் சீர்கெட்டுள்ளன.” என தெரிவித்துள்ளார்.

Also Read: மாதபி புச் மீதான ஊழல் புகாரை அம்பலப்படுத்திய ICICI : காங்கிரஸ் சொல்லும் குற்றச்சாட்டு என்ன?