Politics

தமிழர்கள் குறித்து வெறுப்பு பேச்சு : நீதிமன்றத்தில் மன்னிப்பு கடிதம் கொடுத்த ஒன்றிய இணையமைச்சர் ஷோபா !

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகத்தில் கடந்த மார்ச் மாதம் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் 10 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்ட நிலையில், இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இது தென் மாநிலங்கள் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் போலீசார் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து பெங்களூரு போலீசார் விசாரணை மேற்கொள்கையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகின. தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக NIA அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தமிழ்நாட்டை சேர்ந்தவர் தான் வெடிகுண்டு வைத்ததாக ஒன்றிய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே (Shobha Karandlaje) கடந்த மார்ச் மாதம் பேசியது கண்டனங்களை எழுப்பியது.

ஒன்றிய இணை அமைச்சர் ஷோபாவின் இந்த பேச்சுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர். தமிழர்கள் குறித்து ஒன்றிய இணை அமைச்சர் ஷோபா பேசியது பெரும் சர்ச்சையான நிலையில், வேறு வழியின்றி ட்வீட் மூலமாக மன்னிப்பு கேட்டார். இதனிடையே இவர் மீது திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர், தன்மீதான வழக்குப் பதிவை ரத்து செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஷோபா கரந்த்லாஜே வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் ஒன்றிய இணை அமைச்சர் ஷோபா, செய்தியாளர் சந்திப்பு நடத்தி மன்னிப்பு கேட்டால் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், தமிழ் மக்கள் மீது மரியாதையை இருக்கிறது, இனி இவ்வாறு கூற மாட்டேன் என அவர் உறுதியளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்த நிலையில், அதற்கு ஷோபா தரப்பு வழக்கறிஞர், மன்னிப்பு கோரி நீதிமன்றத்தில் பிராமண பாத்திரம் தாக்கல் செய்வதாகக் கூறினார்.

எனினும் அதை மறுத்த நீதிபதிகள், செய்தியாளர்கள் சந்திப்பில் ஒரு கருத்தை தெரிவித்திருக்கும்போது, அதேபோல செய்தியாளர்கள் சந்திப்பில் மன்னிப்பு கோரினால்தான் சரியாக இருக்கும் என்று கூறி செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தி மன்னிப்பு கேட்குமாறு கூறி இந்த வழக்கை இன்று (செப். 3) ஒத்தி வைத்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஷோபா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், செய்தியாளர் சந்திப்பு நடத்தி மன்னிப்பு கோருவதில் சில சிக்கல்கள் உள்ளதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே எக்ஸ் தளத்தில் மன்னிப்பு கேட்கப்பட்டு விட்டதாகவும் கூறினார்.

மேலும் அவர் தரப்பில் மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் தமிழக மக்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதி நாளை மறுதினம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Also Read: மாதபி புச் மீதான ஊழல் புகாரை அம்பலப்படுத்திய ICICI : காங்கிரஸ் சொல்லும் குற்றச்சாட்டு என்ன?