Politics

மாட்டிறைச்சி வைத்திருத்தவர் அடித்துக்கொலை: "இதனை யாராலும் தடுக்க முடியாது"- பாஜக முதல்வர் சர்ச்சை கருத்து

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டில் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் இந்துத்துவ குண்டர்கள் பலர் பல்வேறு வன்முறை செயல்களிலும், கும்பல் தாக்குதல்களிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அதற்கு எதிராகப் புகாரளித்தாலும் காவல்துறை மற்றும் அரசுத் தரப்பிலிருந்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் குற்றம் புரிபவர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே மேற்கொண்டு வருகிறது. இதனால் இந்துத்துவ கும்பலின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது.

அந்த வகையில் பாஜக ஆளும் ஹரியானாவில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சபீர் மாலிக் எனும் புலம்பெயர் தொழிலாளியை பசுக் காவலர்கள் என்று கூறப்படும் கும்பல் ஒன்று அடித்து கொலை செய்தது.

இந்த விவகாரத்தில் இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட 7 பேர் மீது இதுவரை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், "பசு பாதுகாப்புக்காக சட்டசபையில் கடுமையான சட்டம் இயற்றப்பட்டுள்ள நிலையில், இந்த கொலையை கும்பல் கொலை என அழைக்கக்கூடாது.

பசுக்கள் மீது கிராம மக்கள் மிகுந்த மரியாதை வைத்திருக்கின்றனர். அப்படியிருக்கும்போது, இத்தகைய விஷயங்களைப் பற்றி அவர்களுக்குத் தெரிவித்தால், அதை யார் தடுக்க முடியும்? இது போல நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் வருந்தத்தக்கது"என்று கூறியுள்ளார். அவரின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வு : ஆம்னி பேருந்து கட்டணத்தை உயர்த்துவதாக பேருந்து உரிமையார்கள் அறிவிப்பு !