Politics

"அமெரிக்க நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடுகள் செய்ய முன்வர வேண்டும்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!

தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் மாநிலத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில், தமிழ்நாடு அரசு பல்வேறு முக்கிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 2030ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் இலக்கை நிர்ணயித்து அதற்கான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக, உலக நாடுகளின் முன்னணி நிறுவனங்களை சந்தித்து சர்வதேச அளவில் தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை கொண்டுவரும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். அவருக்கு அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோ நகரின் விமான நிலையத்தில் அமெரிக்க வாழ் தமிழர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து நேற்று சான் பிரான்ஸிஸ்கோவில் முதலீட்டாளர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "தெற்கு ஆசியாவிலேயே முதலீடுகளை ஈர்த்திட உகந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக மாற்ற இலக்கு நிர்ணயித்து செயல்படுகிறோம்.

மோட்டார் வாகனம், ஜவுளி உள்ளிட்ட பொருட்களின் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதல் மாநிலமாக திகழ்கிறது. அமெரிக்க நிறுவனங்கள் தமிழ்நாட்டில் அதிகளவில் முதலீடுகள் செய்ய முன்வர வேண்டும்.நவீன உள்கட்டமைப்பு, திறன்மிகு பணியாளர்களால் உலக முதலீட்டாளர்களை தமிழ்நாடு ஈர்க்கிறது.

முதலீட்டாளர்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க தமிழ்நாடு தயாராக உள்ளது.மோட்டார் வாகனம், ஜவுளி உள்ளிட்ட பொருட்களின் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதல் மாநிலமாக திகழ்கிறது. திராவிட மாடல் அரசின் நடவடிக்கைகளால் மாநிலத்தின் அனைத்து பகுதிகளும் சமமான வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது"என்று தெரிவித்தார்.

Also Read: Nokia, PayPal உள்ளிட்ட நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்: ரூ1000 கோடி முதலீடுகளை ஈர்த்த முதலமைச்சர்!