Politics

சாதிவாரி கணக்கெடுப்புக்கு பாஜகவின் மற்றொரு கூட்டணி கட்சியும் ஆதரவு : பாஜகவுக்கு அதிகரிக்கும் நெருக்கடி !

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தின் போது இறுதியாக 1931-ம் ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பின்னர் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாமல் இருந்தது. இதன் காரணமாக மீண்டும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.

அதிலும் இந்தியா கூட்டணி சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் பாஜக சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரான நிலையில் உள்ளது. ஆனால், பாஜக கூட்டணியிலேயே சாதிவாரி கணக்கெடுப்புக்கு அதிக ஆதரவு கிடைத்து வருகிறது. இதனால் பாஜகவில் இதனை ஆதரிக்கவும் முடியாமல், எதிர்க்கவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

chirag paswan

இந்த நிலையில், சாதிவாரி கணக்கெடுப்புக்கு பாஜகவின் கூட்டணி கட்சியான லோக் ஜன்சக்தி கட்சி பகிரங்க ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய அக்கட்சியின் தலைவரும், ஒன்றிய அமைச்சருமான சிராக் பாஸ்வான், " அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள் பல்வேறு பிரிவினரை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அந்த திட்டங்களை செயல்படுத்தும் போது அது உரிய நபர்களுக்கு சென்று சேர வேண்டும் என்பதை உறுதிசெய்ய வேண்டும். அதற்கு முறையான சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்" என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே பாஜக கூட்டணியில் உள்ள நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவாக உள்ளது. தற்போது பாஜக கூட்டணியில் உள்ள மற்றொரு முக்கிய கட்சியும் சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளது பாஜகவுக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

Also Read: "முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆளுமைத்திறனுக்கு கிடைத்த வெற்றி"- அடியாழத்திலிருந்து பேசியுள்ளார் ரஜினிகாந்த் !