Politics

விவசாயிகள் குறித்து பாஜக எம்.பி. கங்கனாவின் சர்ச்சைக்குரிய பேச்சு... எதிர்ப்பு தெரிவித்த பாஜக - பின்னணி ?

ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே மக்களுக்கு எதிரான பல விஷயங்களை செய்து வருகிறது. குறிப்பாக பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் என பலருக்கும் கேடு விளைவிக்கும் பல்வேறு சட்டங்களையும் இயற்றி வருகிறது. அந்த வகையில் விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு நிறைவேற்றியது.

இந்த சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதன் எதிரொலியாக வேறு வழியின்றி சட்டங்களை திரும்பப்பெற்றது பாஜக அரசு. இதைத்தொடர்ந்து குறைந்தபட்ச ஆதரவு விலைக்காக (MSP) விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தையும் பாஜக கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது.

இதனிடையே பாஜக ஆதரவாளராக இருந்த நடிகை கங்கனா, விவசாயிகளை தீவிரவாதிகள் என்று பேசி பெரும் சர்ச்சையில் சிக்கினார். அண்மையில் பாஜகவில் இணைந்த அவர், மத்திய பிரதேசத்தின் மாண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று பாஜக எம்.பியாக உள்ளார். இந்த சூழலில் தற்போது விவசாயிகள் குறித்து பேசி மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் கங்கனா.

அண்மையில் தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அவர், விவசாயிகள் போராட்டத்தின் போது பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டதாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இதுகுறித்து கங்கனா பேசியதாவது, “ஒன்றிய அரசின் புதிய வேளாண்மைச் சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது மோடி அரசின் வலுவான நடவடிக்கைகள் இல்லாவிட்டால், இந்தியாவை வங்கதேசத்தில் இப்போது நடக்கும் சூழலை போராட்டம் நடத்திய விவசாயிகள் உருவாக்கியிருப்பார்கள்.

வேளாண் சட்டங்கள் போராட்டத்தின்போது தூக்கிலிடுதலும், பாலியல் வன்கொடுமைகளும் நடந்தன. அந்த சட்டங்கள் திரும்பப் பெறப்பட்ட பிறகும் போராட்டங்கள் தொடர்ந்ததற்கு அமெரிக்கா, சீனா போன்ற வெளிநாட்டு சதிகள்தான் காரணம். இந்த நாடு நாய்களின் கைகளுக்கு சென்றாலும் கவலையில்லை என்றே இருக்கிறார்கள்." என்றார்.

இவரது பேச்சு தற்போது அனைவர் மத்தியில் கடும் கண்டனங்களை எழுப்பி வரும் நிலையில், கங்கனாவின் பேச்சை பாஜக ஏற்கவில்லை என்று, பாஜக மத்திய ஊடகத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பாஜக மத்திய ஊடகத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

"விவசாயிகள் போராட்டம் குறித்து பாஜக எம்.பி. கங்கனா ரனாவத் கூறிய கருத்து கட்சியின் கருத்து அல்ல. கங்கனா ரணாவத்தின் கருத்துக்கு பாஜக எதிர்ப்பு தெரிவிக்கிறது. கட்சியின் சார்பில் கட்சியின் கொள்கைப் பிரச்னைகள் குறித்து அறிக்கை வெளியிடவும் கருத்து தெரிவிக்கவும் கங்கனா அதிகாரமோ அனுமதியோ இல்லை. பாஜக சார்பில் இனி இதுபோன்ற எந்த அறிக்கையையும் வெளியிட வேண்டாம் என்று கங்கனாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது." - என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

விவசாயிகள் அதிகம் இருக்கும் ஹரியானா மாநிலத்தில் வரும் அக்டோபர் 1-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நிலையில், கங்கனாவின் இந்த கருத்து விவசாயிகள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: நாளை அமெரிக்கா செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : எந்தெந்த முதலீட்டாளர்களை சந்திக்க திட்டம்?