Politics

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடிய 300 பேர் மீது வழக்குப்பதிவு! : NDA அரசின் சர்ச்சை செயல்!

பா.ஜ.க தலைமையிலான NDA கூட்டணி ஆட்சி செய்யும் மகாராஷ்டிர மாநிலத்தின் பத்லாப்பூர் பகுதியில் அமைந்துள்ள பள்ளியில், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது, மக்களிடையே கடும் சினத்தை கூட்டியுள்ளது.

கொல்கத்தா பாலியல் வன்கொடுமை கொலை குறித்து, நாடே எதிர்ப்பொலி தெரிவித்து வரும் நிலையில், நாளுக்கு நாள், தேசியத்தின் பிற பகுதிகளிலும் பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறுவது, அச்சத்தையும், உடனடி தீர்வு தேவை எண்ணத்தையும் தூண்டுவதாக அமைந்துள்ளது.

அவ்வகையில், உச்சநீதிமன்றமும் தாமாக முன்வந்து, பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு, சட்ட ஒழுங்கு காக்கப்பட வேண்டும் என அரசிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், மகாராஷ்டிரத்தில் பள்ளி மாணவிக்கு நடந்த வன்கொடுமைக்கு எதிராக, நேற்றைய நாள் (20.8.24) 300க்கும் மேற்பட்டோர் போராடினர்.

எனினும், இதனை கருத்தில் கொண்டு, வன்கொடுமை தடுப்பு நடவடிக்கையை முன்னெடுக்காமல், போராடிய 300 பேர் மீது, மகாராஷ்டிர காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது சர்ச்சையாகியுள்ளது.

வழக்குப்பதிவோடு நிறுத்தாமல், 40க்கும் மேற்பட்டோரை கைதும் செய்துள்ளது NDA அரசின் கீழ் செயல்படுகிற காவல்துறை.

இதனால், நீதியை கோரிக்கையாக வைத்தால் கைதா? என மக்கள், அம்மாநில அரசின் மீது அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இதற்கு பதிலளித்த காவல் துறையினர், போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.

Also Read: கேரளத்தில் கோலாகலமாக கொண்டாடப்படும் ஓணம் விழா ரத்து! : கேரள முதல்வர் அறிவிப்பு!