Politics

உயரதிகாரிகள் பணியிடங்களுக்கு இடஒதுக்கீடின்றி Lateral Entry : எதிர்ப்பு காரணமாக பின்வாங்கியது ஒன்றிய அரசு!

ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் 10 இணைச் செயலாளர்கள், 35 இயக்குநர்கள், துணைச்செயலாளர்கள் என 45 காலிப்பணியிடங்களை நிரப்ப, ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அண்மையில் அறிவிப்பாணை வெளியிட்டது.

இதில் தனியார் துறையை சேர்ந்தவர்களும் நேரடி நியமனம் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர் என்ற அறிவிப்பு வெளியாகியிருந்தது. நேரடி நியமனம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டால் அதில் இடஒதுக்கீடு பின்பற்றப்படாது என்பதால் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் கடும் கண்டனங்களை எழுப்பிய நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் ஒன்றிய அரசின் இந்த செயலுக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதோடு பாஜகவின் கூட்டணி கட்சியான லோக் ஜனசக்தி கட்சியின் தலைவரும், ஒன்றிய அமைச்சருமான சிராக் பாஸ்வானும் ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இது குறித்து பேசிய அவர், "அரசு நியமனங்களில் இட ஒதுக்கீடு விதிகளை பின்பற்றப்பட வேண்டும். ஒன்றிய அரசின் Lateral Entry-க்கு நானும் எனது கட்சியும் ஆதரவாக இல்லை"என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் கடும் எதிர்ப்பு காரணமாக Lateral Entry என்கிற நடைமுறையின் கீழ் நியமனம் செய்வதற்கான அறிவிக்கையை திரும்பப் பெற ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் UPSC-க்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், ஒன்றிய அரசின் உயர் பதவிகளில், இடஒதுக்கீட்டை பின்பற்றாமல் தனியார் துறைகளைச் சேர்ந்தவர்களை Lateral Entry என்கிற நடைமுறையின் கீழ் நியமனம் செய்வதற்கான அறிவிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Also Read: மலையாள சினிமாவில் பாலியல் ரீதியான தொல்லை... பதறவைக்கும் அரசின் விசாரணை அறிக்கை வெளியீடு !