Politics

"RSS சித்தாந்தத்தின் 90 சதவீதம் இந்துக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டது"- சபாநாயகர் அப்பாவு !

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே இடிந்தகரை கடற்கரை கிராமத்தில் கடற்கரையில் மீன்வளத் துறை சார்பில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீன்பிடி படகு இறங்குதளம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை காணொளி காட்சி மூலமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து இடிந்தகரையில் நடைபெற்ற விழாவில் சபாநாயகர் அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றினார்.

தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஆளுநர் ரவி ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம், சனாதான கொள்கையை கொண்டவர். இந்தியாவை பிரிக்க வேண்டும் என்று முதன் முதலில் குரல் கொடுத்தவர்கள் அவர்கள் தான். திமுக, திராவிட கழகத்தின் கொள்கைகள் பிரிப்பது அல்ல சேர்ப்பது தான். எல்லா சமூகமும் சேர்ந்து வளர வேண்டும். அதுதான் சமூக நீதி. அதுதான் திராவிட மாடல். எனவே ஆளுநர் அவர்கள் இப்படிப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.

பீகாரில் உள்ள பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்கள் 69% பேர்களில் மூன்று சதவீதம் பேர்கள்தான் படித்தவர்களாக உள்ளனர். அங்கு இருக்கக்கூடிய மேல்குடி மக்கள் 10 சதவீதம் பேர் உள்ளனர். அந்த பத்து சதவீத பேரும் பட்டப்படிப்பு படித்தவர்கள். 10% தவிர மற்ற யாரும் படிக்க கூடாது, வேலைக்கு வரக்கூடாது என்பது தான் அவர்களுடைய சித்தாந்தம். எனவே ஆளுநர் அவர்கள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி நடந்து கொள்ள வேண்டும்.

பாராளுமன்றம், சட்டமன்றம் உட்பட பல்வேறு உயர் பதவிகளுக்கு அனுபவத்தின் மூலம் சீனியாரிட்டி முறையில் வரக்கூடிய பதவிகளுக்கு ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை உடைய தனியார் கார்ப்பரேட் கம்பெனியில் பணியாற்றுகின்றவர்களை உயர் பதவிக்கு பணி அமர்த்துகின்றார்கள். அவர்களுடைய எண்ணம் இந்திய அரசியலமைப்பு சட்டம் வருவதற்கு முன்னால் எப்படி இருந்தார்களோ, ஆதிக்கம் செலுத்தினார்கள் அதுபோன்று தற்போதும் நினைக்கிறார்கள். அவர்கள் தான் வேலைக்கு செல்வார்கள். லேட்டரல் எண்ட்ரி சமூக நீதி கொள்கைக்கு இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது மட்டுமல்ல. குழி தோண்டி புதைக்கின்ற ஒரு திட்டத்தினுடைய முதல் புள்ளிதான் லேட்டரல் எண்ட்ரி ஆகும்"என்று கூறினார்.

தொடர்ந்து இந்துக்கள் ஓட்டு பாஜக பக்கம் சென்றுவிடும் என்ற அச்சத்தில் திமுக அரசு முத்தமிழ் முருகன் மாநாடு நடத்துகின்றனர் என ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியதற்கு பதில் அளித்த சபாநாயகர், "இந்துக்கள் ஓட்டு பாஜகவிற்கு போகாது, இந்துக்கள் யார் என்று சொன்னால் பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், மலைவாழ் மக்கள், இவர்கள் தான் இந்துக்கள். இவர்கள்தான் நாட்டில் 90 சதவீதம் பேர் உள்ளனர். இந்த 90 சதவீதம் பேருக்குத்தான் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தின் படி கல்வி, வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டது . எனவே இந்துக்கள் யார் பக்கம் இருப்பார்கள் என்றால் சமூகநீதி கொள்கை கொண்ட திராவிட இயக்கத்தோடுதான் இருப்பார்கள்.பாஜகவின் பக்கம் செல்லமாட்டார்கள்.

அரசியலைப்பு சட்டம் வருவதற்கு முன்னால், நீதிகட்சி திராவிட இயக்கம் தொடங்குவதற்கு முன்னால் அவர்கள் குருகுலம் வைத்து கல்வி கற்றுக் கொடுத்தார்கள். அதில் தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுக்கவில்லை, ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் என்பது உயர் சாதியினர் 10 சதவீதம் அவர்களைத் தவிர யாரும் படிக்க முடியாது, படிக்க கூடாது என்பதுதான். நமது இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் 90 சதவீத இந்துக்களை வைத்துதான் மாநாடு நடத்துகிறார்" என கூறினார்.

Also Read: கலைஞர் 100 நாணயம் : “MGR நினைவு நாணயத்தில் தமிழ் எங்கே?” - பழனிசாமிக்கு வலுக்கும் கண்டனங்கள் !