Politics

அச்சத்தால் தாமதப்படுத்தப்படும் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் : எதிர்க்கட்சிகள் கண்டனம்!

ஒன்றியத்தில் கூட்டணிகளின் உதவியுடன், ஆட்சியைத் தக்கவைத்த பா.ஜ.க, மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் கூட்டணிகளை வைத்தும் வெல்ல முடியாது என உணர்ந்துவிட்டது என்ற கருத்துகள், பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.

அதற்கு, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், மகாராஷ்டிர மக்கள் பா.ஜ.க.விற்கு அளித்த விடையும் முக்கிய காரணமாய் அமைந்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் ஆளும் கட்சியினராக NDA இருந்தாலும், மக்களவைத் தேர்தலில் பெரும் சரிவை சந்தித்தது பா.ஜ.க கூட்டணி. அதன் தொடர்ச்சி, தேர்தல் முடிவுக்கு பின்பும் தொடர்கிறது.

இதனால், தேர்தலை சந்திப்பதில் பா.ஜ.க.வினருக்கு தயக்கமும் அதிகரித்து வருகிறது. அதே நிலை, ஜார்க்கண்டிலும் நீடிக்கிறது.

மக்களவைத் தேர்தலின் போது, தகுந்த ஆதாரங்களின்றி திட்டமிட்டு கைது செய்யப்பட்ட ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், தற்போது பிணையில் விடுதலையாகி, மக்களின் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளார்.

இதனால், பா.ஜ.க.வினரால், அங்கும் காலூன்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைந்துள்ளன. எனவே, பா.ஜ.க.விற்கு தேவைப்படும் காலத்தை, வேறு விதமான வெற்று காரணங்களாக வெளிப்படுத்தியுள்ளது தேர்தல் ஆணையம் என்ற குற்றச்சாட்டும் ஒரு புறம் வலுக்கத்தொடங்கியுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த, சிவசேனா (தாக்கரே) மூத்த தலைவர் சஞ்சய் ராவத், “மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல்களை தாமதப்படுத்தியிருப்பது பா.ஜ.க.வினரின் அச்சத்தை வெளிப்படுத்துகிறது. மாநில கட்சிகளை பிரித்து, அதில் குளிர்காய விரும்பும் பா.ஜ.க.விற்கு காலம் தேவையாக இருக்கிறது என்பதும் உறுதிப்பெற்றுள்ளது. எனினும், பா.ஜ.க நினைப்பது நடக்காது” என்றார்.

Also Read: புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் நியமனம்! : யார் இந்த முருகானந்தம்?