Politics

”இட ஒதுக்கீட்டை மதிக்காமல் மநு அநீதியை நிறைவேற்ற துடிக்கும் மோடி அரசு” : சீத்தாராம் யெச்சூரி ஆவேசம்!

ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் 10 இணைச் செயலாளர்கள், 35 இயக்குநர்கள், துணைச்செயலாளர்கள் என 45 காலிப்பணியிடங்களை நிரப்ப, ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அண்மையில் அறிவிப்பாணை வெளியிட்டது.

இந்நிலையில்,இப்பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் என்ற ஒன்றிய அரசின் அறிவிப்புக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது.

இதற்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் கடும் கண்டனங்களை எழுப்பி வருகிறார்கள்.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, ”ஒன்றிய அரசு பல்வேறு துறைகளில் இணை செயலாளர், துணை செயலாளர் மற்றும் இயக்குநர் பதவிகளில் 45 அதிகாரிகளை நேரடியாக பணியில் அமர்த்துவது என்பது, நமது அரசியலமைப்புத் திட்டத்தைத் தகர்க்க RSS நபர்களை உட்புகுத்துவதற்கான தெளிவான முயற்சியாகும்.

இது இட ஒதுக்கீடுக்காக அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய உரிமையை மறுக்கும் செயலாகும். இட ஒதுக்கீட்டை மதிக்காமல்‌ மநு அநீதியை நிறைவேற்ற மோடி அரசு அவசரம் காட்டுகிறது.” என கண்டித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே அரசு பணியிடங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்களை எப்படியாவத நுழைத்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. அதன் வெளிப்பாடுதான் இந்த நேரடி நியமனம் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ”இடஒதுக்கீட்டை பறிக்கிறது பா.ஜ.க” : நேரடி நியமனத்திற்கு ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு!