Politics

கர்நாடக ஆளுநரின் உத்தரவுக்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை : முழு விவரம் என்ன ?

MUDA எனும் மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தில், முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, 14 வீட்டுமனைகள் முறைகேடாக வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. . இந்த விவகாரத்தை அடுத்து அம்மாநில காங்கிரஸ் அரசு மீது பாஜக கடும் விமர்சனத்தை முன்வைத்தது.

இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து தனது மனைவிக்கு சொந்தமான நிலத்தை சட்ட விரோதமாக ஆக்கிரமித்ததற்கு இழப்பீடாகவே இந்த மனைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக சித்தராமையா விளக்கமளித்தார். எனினும் இந்த விவகாரத்தை பாஜகவினர் பூதாகரமாக்க முயன்று வருகின்றனர். அங்கங்கே ஆர்ப்பாட்டம் என பல விஷயங்களை செய்து வருகிறது பாஜக.

மேலும் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அம்மாநில ஆளுநர் தாவர் சந்த் கெலாட்டிடம் பாஜக தலைவர்கள் முறையிட்டனர். அதனைத் தொடர்ந்து 'MUDA' விவகாரம் தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்கு தொடர அம்மாநில ஆளுநர் அனுமதியளித்தார்.

ஆளுநரின் இந்த உத்தரவை எதிர்த்து சித்தராமையா தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, " தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசின் முதலமைச்சருக்கு எதிராக ஆளுநர் விசாரணைக்கு அனுமதி வழங்கியுள்ளார். ஆனால் எதற்காக விசாரணைக்கு அனுமதி வழங்கினார் என்பதற்கு ஒரு சிறு காரணம் கூட தெரிவிக்கப்படவில்லை.

1992 முதல் 2022 வரையிலான நிகழ்வுகளை மாநில அமைச்சரவை ஆய்வு செய்து விசாரணைக்கு அனுமதி வழங்க முடியாது என்று கூறியுள்ளது. ஆனால் அந்த அறிக்கையை ஆளுநர் முழுமையாக கருத்தில் கொள்ளவில்லை. மாநில அமைச்சரவையின் முடிவை மீறும் வகையில் ஆளுநர் செயல்பட்டுள்ளார். மாநில அரசை சீர்குலைக்கும் வகையில் ஆளுநர் செயல்படுகிறார் என்று சித்தராமையா சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கர்நாடக முதலமைச்சருக்கு எதிராக வழக்கை விசாரிக்க அனுமதி வழங்கிய ஆளுநரின் உத்தரவுக்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இது ஆளுநர் மற்றும் பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Also Read: "முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது, அது குறித்து வதந்தி பரப்பினால் சிறை" - கேரள அரசு அறிவிப்பு !