Politics

அதானி ஊழல் : “SEBI தலைவர் ராஜினாமா செய்ய வேண்டும்” - ஒன்றிய பாஜக அரசுக்கு காங்கிரஸ் வலியுறுத்தல் !

மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தங்களை தயார்ப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த தேர்தல்கள், அதானி முறைகேடு, நாட்டின் முக்கிய பிரச்னைகள் உள்ளிட்டவை குறித்து இன்று நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் பொதுச் செயலாளர்கள் கே.சி.வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோரும் மற்றும் அனைத்து மாநிலங்களின் தலைவர்களும் கலந்து கொண்டனர். தொடர்ந்து இந்த கூட்டத்தில் அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட பதிவு வருமாறு :

"காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்கள், மாநில தலைவர்களின் கூட்டம் இன்று நடைபெற்றது. சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகள் மற்றும் நாட்டின் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

1. செபி மற்றும் அதானிக்கு இடையேயான தொடர்பு குறித்த அதிர்ச்சியூட்டும் விஷயங்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும். பங்குச் சந்தையில் சிறு முதலீட்டாளர்களின் பணத்தை பறிகொடுக்க முடியாது. செபி தலைவர் ராஜிநாமா செய்வதற்கான நடவடிக்கைகளை மோடி அரசு செய்ய வேண்டும். இது தொடர்பாக விசாரணை நடத்த நாடாளுமன்ற கூட்டுக் குழு (JPC) அமைக்க வேண்டும்.

2. கட்டுப்பாடற்ற வேலையின்மை, பணவீக்கம், அதிகரித்து வரும் வீட்டு செலவுகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும். ஏழை மற்றும் நடுத்தர மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

3. அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல் தடையின்றி தொடர்கிறது. மக்கள் கோரிக்கையான சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.

4. நமது விவசாயிகளுக்கு சட்டப்பூர்வ குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) நிர்ணயம் செய்ய கோரி காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும். தேசபக்தி கொண்ட நமது இளைஞர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

5. ரயில்கள் தடம் புரளும் சம்பவம் வாடிக்கையாகிவிட்டது. இதனால், கோடிக்கணக்கான பயணிகள் அவதிப்படுகின்றனர். காலநிலை தொடர்பான பேரழிவுகள் மற்றும் சரிந்து வரும் உள்கட்டமைப்பு கவலையை ஏற்படுத்துகின்றன.

இந்த பிரச்னைகளை வைத்து தேசிய அளவில் மக்கள் மத்தியில் பிரசாரம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Also Read: SEBI - Hindenburg விவகாரம் : “அதானி ஊழலில் பிரதமர் மோடிக்கும் தொடர்பு” : காங்கிரஸ் பகிரங்க குற்றச்சாட்டு!