Politics

பங்குகளை கணவரின் பெயருக்கு மாற்றி முறைகேடு செய்த SEBI தலைவர் - Hindenburg மீண்டும் குற்றச்சாட்டு !

அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் (Hindenburg) என்ற ஆய்வு நிறுவனம், அதானி குழுமத்தின் பங்குகளில் பல குளறுபடிகள் உள்ளதை கடந்த ஆண்டு வெளிப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து அதானி நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவை சந்தித்தது.

இந்த முறைகேடு குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தவேண்டும் என நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால், இது குறித்து SEBI அமைப்பு விசாரணை நடத்தும் என ஒன்றிய பாஜக அரசு அறிவித்தது.

தொடர்ந்து இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தை SEBI விசாரணையே போதுமானது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதனிடையே அதானி ஊழலில் SEBI தலைவருக்கும் பங்கு உள்ளதாக அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுகளை ஹிண்டன்பர்க் முன்வைத்துள்ளது.

இதுகுறித்து ஹிண்டன்பர்க் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அதானி குழுமம் முறைகேட்டிற்கு பயன்படுத்திய வெளிநாட்டு நிறுவனங்களில் SEBI தலைவர் மாதபி பூரி புச் மற்றும் அவரது கணவர் தவால் புச் ஆகியோருக்கும் பங்குகள் இருந்ததாக குறிப்பிட்டுள்ளது.

இதற்கு SEBI தலைவர் மாதபி பூரி புச் விளக்கமளித்த நிலையில், மாதவி புச் எங்களின் அறிக்கைக்கு கொடுத்த பதில், சில முக்கியமானவைகளை ஒப்புக்கொள்வதோடு, புதிதாக பல முக்கிய கேள்விகளையும் எழுப்புவதாக அமைந்துள்ளது என ஹிண்டன்பர்க் நிறுவனம் குறிப்பிட்டு மேலும் சில ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளது.

ஹிண்டன்பர்க் சார்பில் நேற்று இரவு வெளியிடப்பட்ட அறிக்கையில், "SEBI தலைவராக மாதவி புச் நியமனம் செய்யப்பட்ட 2 வாரங்களுக்குப் பிறகு அவர் தனது பங்குகளை தனது கணவரின் பெயருக்கு மாற்றியுள்ளார். அதன் பின்னரும் அவர் தனது தனிப்பட்ட மின்னஞ்சலைப் பயன்படுத்தி தனது கணவரின் பெயரில் வணிகம் செய்தார் என்பதற்கு முக்கிய ஆதாரங்கள் உள்ளது. இது வெளிப்படையாக இரட்டை ஆதாயம் பெறும் விவகாரம்."

மாதவி புச்சின் பதில், மொரீசியசில் வினோத் அதானியுடன் முதலீடு செய்ததை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதாக உள்ளது.தனது கணவரின் இளம் வயது தோழருடன் இந்த ஃபண்ட் நடத்தப்பட்டதும் அப்போது அவர் அதானி இயக்குனராக இருந்ததையும் உறுதி செய்துள்ளார்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Also Read: வினேஷ் போகத் விவகாரத்தில் பொறுப்பை தட்டிக்கழிக்கும் இந்திய ஒலிம்பிக் சங்கம்: PT உஷா பேட்டியால் சர்ச்சை !