Politics

பேசிக்கொண்டிருக்கும்போதே அணைக்கப்பட்ட மைக்... நிதி ஆயோக் கூட்டத்தில் அவமானப்படுத்தப்பட்ட மம்தா!

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2024- 25 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில், மைனாரிட்டி பாஜக ஆட்சியை தக்கவைக்க உதவிய கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கே கூடுதல் நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோர் ஆளும் பீகார், ஆந்திரா மாநிலங்களின் சிறப்பு திட்டங்களுக்கு மட்டுமே ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் பாஜக ஆளும் அசாம் மாநிலத்துக்கு சிறப்பு திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர பிற மாநிலங்களுக்கு குறிப்பிடத்தக்க வகையில் எந்த சிறப்பு திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. அதிலும் தமிழ்நாட்டின் பெயர் கூட பட்ஜெட்டில் இல்லாத நிலையில், தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு ஒதுக்குவதாக அறிவித்த நிதியை விடுவிப்பதாக கூட எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை. இப்படி பாரபட்சம் பார்த்து செயல்படும் ஒன்றிய பாஜக அரசுக்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளை கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கோப்புப் படம்

மேலும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து, பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இவரைத் தொடர்ந்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, ஹிமாச்சல் முதலமைச்சர் சுக்விந்தர் சுகு, கேரள முதலமைச்சர் பினராய் விஜயன், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த்மான் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த முதல்வர்களும் இந்த கூட்டத்தை புறக்கணித்தனர்.

மேலும் பா.ஜ.க கூட்டணியில் இருக்கும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்துள்ளார். மொத்தம் 10 மாநில முதல்வர்கள் இந்த கூட்டத்தை புறக்கணித்த நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மட்டும் பங்கேற்றார். அப்போது அவர் அந்த கூட்டத்தில் உரையாற்றும்போது அவரது மைக் அணைக்கப்பட்ட சம்பவம் கண்டனங்களை எழுப்பியுள்ளது.

டெல்லியில் இன்று நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் ஒவ்வொரு மாநில முதல்வர்களுக்கும் பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி மம்தா பானர்ஜியும் பேசினார். அப்போது அவர் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை பாரபட்சமாக நடத்தக்கூடாது என்று பேசினார். இந்த சூழலில் மம்தா பேசிக்கொண்டிருக்கும்போதே அவரது மைக் திடீரென அணைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இதனை கண்டித்து மம்தா வெளிநடப்பு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கூட்டாச்சி தத்துவத்தின் அடிப்படையில் ஒன்றிய அழைப்பை ஏற்று, நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற தான், பேசிக்கொண்டிருக்கும்போதே மைக் அணைக்கப்பட்டதாகவும், தனக்கு பேச வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே வழங்கப்பட்டதாகவும், பிறர் 10-15 நிமிடங்கள் வரை பேசியதாகவும் குற்றம்சாட்டினார்.

நிதி ஆயோக் கூட்டத்தில் எதிர்க்கட்சியின் முக்கிய அங்கமான மம்தா பானர்ஜி அவமதிக்கப்பட்ட நிகழ்வுக்கு தற்போது கண்டனங்கள் எழுந்து வருகிறது.

Also Read: சுரங்கங்கள் முதல் குவாரிகள் வரை... மாநில அரசுக்கே வரி விதிக்கும் உரிமை - தீர்ப்புக்கு கி.வீரமணி வரவேற்பு!