Politics

உ.பி.க்கு 3,924 கோடி, குஜராத்துக்கு 3,777 கோடி- தமிழ்நாட்டுக்கு வெறும் 713 கோடி- அம்பலப்படும் பாஜக அரசு!

தமிழ்நாடு அரசும் ஒன்றிய அரசும் இணைந்து கூட்டு முயற்சி அடிப்படையில், 50:50 என்ற சமபங்கு வீதத்தில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் உருவாக்கப்பட்டு சென்னையின் முதற்கட்டப் மெட்ரோ பணிகள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ரூ.63,246 கோடி செலவில், 119 கிலோமீட்டர் நீளமுள்ள மேலும் மூன்று வழித்தடங்களைக் கொண்ட இரண்டாம் கட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒன்றிய அரசின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது..

அதனைத் தொடர்ந்து ஒன்றிய அரசின் அனுமதியும் இதற்கு வழங்கப்பட்ட நிலையில், கடந்த 2020 அன்று சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. தொடர்ந்து 2021-22 நிதிநிலை அறிக்கையில் சென்னை மெட்ரோ பணிகளுக்கு ஒன்றிய அரசு சார்பில் நிதியுதவி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், தற்போதுவரை ஒன்றிய அரசு சென்னை மெட்ரோ பணிகளுக்கு நிதி ஒதுக்காத நிலையில், தமிழ்நாடு அரசே முழு செலவையும் ஏற்றுக்கொண்டு மெட்ரோ பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், மெட்ரோ பணிகளுக்காக பாஜக ஆளும் பிற மாநிலங்களுக்கு அள்ளிக்கொடுக்கும் பாஜக அரசு தமிழ்நாட்டை புறக்கணித்து வருவது தற்போது அம்பலமாகியுள்ளது.

இது குறித்து, மாநிலங்களவையில் கனிமொழி எம்.பி எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அமைச்சகம் சார்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. அதில் மெட்ரோ சேவைகளுக்காக உத்தரபிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு கடந்த 10 ஆண்டில் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதும், பாஜக அரசால் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதும் அம்பலமாகியுள்ளது.

மெட்ரோ பணிகளுக்காக மஹாராஷ்டிராவுக்கு 4,109 கோடியும், உத்தரப்பிரதேசத்துக்கு 3,924, குஜராத்துக்கு 3,777 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு மெட்ரோ பணிகளுக்கு வெறும் 713 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாஜக தமிழ்நாட்டை அப்பட்டமாக புறக்கணித்து வருகிறது என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

Also Read: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்ற வைத்த நெருப்பு: மோடி கூட்டத்தை புறக்கணிக்கும் இந்தியா கூட்டணி முதல்வர்கள்!