Politics

"இனி அரசு அதிகாரிகள் டவுசர் அணிந்து அலுவலகங்களுக்கு வரலாம்"- பாஜக அரசின் உத்தரவை விமர்சித்த காங்கிரஸ் !

அரசு ஊழியர்களாக இருப்பவர்கள் எந்த அரசியல் கட்சியிலும் உறுப்பினர்களாக இருக்கக்கூடாது என்ற விதி தற்போது நடைமுறையில் உள்ளது. பல ஆண்டுகளாக ஒன்றிய, மாநில அரசுகள் மற்றும் பொது நிறுவனங்களில் இந்த விதி பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம் என ஒன்றிய அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இவ்விவகாரம் குறித்து எக்ஸ் வலைத்தளப் பதிவொன்றை வெளியிட்டுள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், "காந்திஜியின் படுகொலையைத் தொடர்ந்து 1948 பிப்ரவரியில் சர்தார் படேல் ஆர்எஸ்எஸ் அமைப்பைத் தடை செய்து உத்தரவு பிறப்பித்தார்.

பின்னர், நன்னடத்தை உறுதி அளிக்கப்பட்டதன் பேரில் இந்த தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. அதன்பின்னர் கூட நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் மூவர்ணக் கொடி பறக்கவிடபடவில்லை. பின்னர 1966ல், ஆர்.எஸ்.எஸ் நடவடிக்கைகளில் ஈடுபட அரசு ஊழியர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

ஜூன் 4, 2024க்குப் பிறகு, தன்னைத்தானே புனிதராகவும், உயிரியல் ரீதியில் பிறக்காதவர் என்றும் அறிவித்துக் கொண்ட பிரதமருக்கும் ஆர்எஸ்எஸ்ஸுக்கும் இடையிலான உறவுகள் சீர்குலைந்துவிட்டதால் அதனை சரிசெய்ய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது கூட நடைமுறையில் இருந்த 58 ஆண்டு தடை, ஜூலை 9-ம் தேதி நீக்கப்பட்டது. ஒன்றிய அரசின் இந்த முடிவால் அரசு அதிகாரிகள் டவுசர் அணிந்து கொண்டு அலுவலகங்களுக்கு வரலாம்" என விமர்சித்துள்ளார்.

Also Read: "அதிமுக காணாமல் போய்விடுமோ என்ற அச்சம் பழனிசாமிக்கு வந்துள்ளது" - அமைச்சர் சேகர் பாபு !