Politics

"அதிமுக காணாமல் போய்விடுமோ என்ற அச்சம் பழனிசாமிக்கு வந்துள்ளது" - அமைச்சர் சேகர் பாபு !

வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வடசென்னை மக்களின் வளர்ச்சிக்காக பொதுப்பணித் துறைக்கு சொந்தமான பயன்படுத்தாத இடங்களை சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் புதிய திட்டங்களை செயல்படுத்தும் வகையில் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மேம்பாலம் அருகில் உள்ள பொதுப்பணித்துறை பழைய பணிமனை மற்றும் சென்னை, வால்டாக்ஸ் ரோடு, தண்ணீர் தொட்டி தெருவில் உள்ள பழைய பொது பண்டகசாலையில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு களஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "வடசென்னை வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து துறை சார்ந்த அதிகாரகள் உடன் ஆய்வு மேற்கொண்டோம். ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் எந்த வகையில் இந்த நிலங்களை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது என்று ஆய்வு மேற்கொண்டோம். தண்ணீர் தொட்டி பகுதி மற்றும் ஸ்டான்லி மருத்துவமனை அருகே உள்ள இடங்களை மக்களுக்கு என்ன மாதிரியான பயன்பாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொண்டோம். அதை தொடர்ந்து சென்னை மாநகராட்சி சார்பாக கட்டப்பட்டு வரும் திருமண மண்டபம் ஒன்றையும் சட்டமன்ற உறுப்பி்னர் மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டு வரும் கூடுதல் பள்ளி கட்டிடங்களையும் அதே போல CMDA சார்பாக கட்டப்பட்டு வரும் டயாலிசிஸ் கட்டடத்தையும் ஆய்வு மேற்கொண்டோம்.

வடசென்னை வளர்ச்சி திட்ட பணிகளில் 4378 கோடி அளவில் திட்டங்களை செயல்படுத்த முதலமைச்சரைத் தெரிவித்திருக்கிறார். அதில் நடைபெற்ற 208 பணிகளில் 108 பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மீதம் உள்ள 100 பணிகளை மேற்கொள்வதற்கான பணிகளை தொடர்ந்து அந்தந்த துறை சார்பாக நடைபெற்று வருகிறது. சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் திட்ட பணிகள் சுமார் 685 கோடி செலவில் சென்னை பெருநகர வளர்ச்சிக்கு குழுமமே மேற்கொண்டு வருகிறது. 4378 கோடி ரூபாயில் கிட்டத்தட்ட பெருநகர சென்னை வளர்ச்சி குழுமம் 1619 கோடி ரூபாயை முதலமைச்சர் உத்தரவின் பேரில் பல்வேறு துறைகளில் வழங்கி இருக்கிறது. இந்த திட்டங்கள் நிறைவு பெறும்போது வடசென்னை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெறும்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேயராக இருந்தபோதுதான் போக்குவரத்து நெரிச்சலுக்கு குறைப்பதற்காக பாலங்களைக் கொண்டு வந்தார். தற்போது வட சென்னை வளர்ச்சி திட்டத்திற்கு 208 பணிகள் 4,378 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகள் நிறைவு பெறும்போது வடசென்னை பகுதி மக்களின் வாழ்வாதாரம் அடிப்படை தேவைகள் முழுமையாக நிறைவு பெறும்.

எடப்பாடி பழனிசாமியை மக்களே ஏற்றுக்கொள்ளவில்லை. அம்மா உணவகம் அவர்கள் ஆட்சியில் பட்டுப்போக செய்திருந்த ஒரு திட்டம். பட்டு போயி கெட்டுப் போய் விடக்கூடாது என்பதற்காக முதலமைச்சர் அதை கையில் எடுத்தற்கு அவர் வரவேற்றிருக்க வேண்டும், பாராட்டு தெரிவித்து இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு வஞ்சக எண்ணத்தோடு குறுகிய புத்தியோடு அதை விமர்சனம் செய்வதை நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர் கட்சிக்கு சார்ந்த தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். முதல்வரை பொறுத்த வரை எதிரியாக இருந்தாலும் துரோகிகளாக இருந்தாலும் கருணை உள்ளத்தோடு ஏற்றுக் கொள்ளக் கூடியவர். முதலமைச்சர் தானாக அரச பதிவிக்கு வந்துவிடவில்லை. கிட்டதட்ட 50 ஆண்டு கால அரசியல் நெடும் பயணத்தில் மக்களோடு பயணித்த முதல்வர், அடிமட்டத்திலிருந்து இன்று முதல்வராக வந்திருப்பவர். குடிசையையும் கண்டவர் கோபுரத்தையும் கண்டவர்.

கரைந்து கொண்டே இருக்கக்கூடிய அதிமுக முதலமைச்சர் நடவடிக்கையால் காணாமல் போய்விடுமோ என்ற அச்சம் பழனிச்சாமிக்கு வந்துள்ளது. எங்கள் பணி மக்கள் பணியாது தொடரும் எந்த திட்டமாக இருந்தாலும் மக்கள் நலத்திட்டங்களுக்கு உயிர் கொடுக்கக்கூடிய முதல்வர்.எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி காலத்தில் அம்மா உணவகத்தில் குவாலிட்டியாக உணவு கிடைக்கவில்லை இப்போது தான் எல்லாம் குவாலிட்டியாக இருக்கிறது" என தெரிவித்தார்.

Also Read: இடஒதுக்கீடு குறைப்பு : ஏற்க மறுத்த போராட்டக்கார்கள்... வங்கதேச வன்முறையில் 150-ஐ கடந்த உயிரிழப்பு !