Politics

நீட் தேர்வு : ஆண்டுக்கு 100 கோடி லாபம் ஈட்டும் ஒன்றிய அரசு... உச்சநீதிமன்ற விசாரணையில் வெளிவந்த உண்மை !

நடப்பு ஆண்டில் நடைபெற்ற நீட் தேர்வில் இதுவரை இல்லாத அளவு மோசடி நிகழ்ந்துள்ளது. ஆள் மாறாட்டம், தேர்வு வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் என பல வழிகளில் முறைகேடு நடந்துள்ளது. குறிப்பாக இதுபோன்ற சம்பவங்கள், பாஜக மற்றும் அதன் கூட்டணி ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான், மகாராஷ்டிரா, பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் நடந்துள்ளது.

பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட பெற்றோர்கள், மாணவர்கள், தேர்வு நடத்தும் அதிகாரிகள் என 30-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். நாடு முழுவதும் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும் எந்த ஆண்டும் இல்லாத அளவில் இந்த ஆண்டு நீட் தேர்வில் நடந்த ஏராளமான முறைகேடுகள் அம்பலமாகின.

இதையடுத்து நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்து மறு தேர்வு நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வலுத்து வந்த நிலையில், போராட்டமும் வெடித்தது. தொடர்ந்து இது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் அங்கு வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதில் இன்று நடைபெற்ற விசாரணையில் மாணவர்களிடம் நீட் கட்டணமாக 400 கோடி ரூபாய் வசூலித்து விட்டு ரிக் ஷாவில்தான் தேர்வு மையத்துக்கு வினாத்தாளை அனுப்புவீர்களா? என்று உச்சநீதிமன்றம் ஒன்றிய அரசிடம் கேள்வி எழுப்பியது. அதற்கு நீட் கட்டணமாக 400 கோடி ரூபாய் பெறப்பட்டதாகவும் 300 கோடி தேர்வுக்காக செலவானதாகவும் ஒன்றிய அரசு பதிலளித்த நிலையில், இந்த தேர்வு மூலம் 100 கோடி ரூபாய் அளவு ஒன்றிய அரசு லாபம் பார்த்தது தெரியவந்தது.

தொடர்ந்து நீட் தேர்வு மதிப்பெண் விவரங்களை தேர்வு மையங்கள் வாரியாக நாளை மாலை 5 மணிக்குள் வெளியிட தேசிய தேர்வு மையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அப்படி முடிவுகள் வெளியானால் மட்டுமே தேர்வு மையங்கள் வாரியாக முடிவுகளை வெளியிட்டால்தான் மோசடி எங்கெங்கு நடந்துள்ளது என்பது முழுமையாக தெரியவரும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

Also Read: நீதிபதி சந்துரு மீது அண்ணாமலைக்கு கோவம் வர காரணம் இதுதான் - செல்வப்பெருந்தகை விமர்சனம் !