Politics

ஜி.எஸ்.டி வரியிலும் பிரிவினை கொண்டு வரும் பா.ஜ.க! : அகிலேஷ் குற்றச்சாட்டு!

கடந்த 10ஆண்டுகால பா.ஜ.க ஆட்சியில், கொண்டுவரப்பட்ட பொருளியல் திட்டங்கள் வழி, பொதுமக்கள் கடுமையான பொருளாதார சுமையை சந்தித்து வருகின்றனர்.

அதில், பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி வரி விதிப்பு முக்கிய பங்காற்றி வருகிறது. குறிப்பாக அரசு உடைமைகளை, தனியாருக்கு தாரைவார்த்ததன் வழி, உழைக்கும் சமூகத்தினரின் கடன் சுமையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

மேலும், பா.ஜ.க.வின் இந்துத்துவ அரசியலை முன்னெடுக்க உதவும், முதலாளித்துவத்தை வளர்க்க ஒன்றிய அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், நாட்டின் சமத்துவத்தையும், சமூகநீதியையுமே கேள்விக்குறியாகியுள்ளது.

இந்நிலையில், அண்மையில் வெளியான தகவலின் படி, கடந்த 10 ஆண்டுகளில் தனியார் சிறு, குறு நிறுவனங்கள் பல நசுக்கப்பட்டு, இலட்கணக்கானோர் வேலையிழப்பை சந்திக்க நேர்ந்துள்ளது என்ற செய்தி அம்பலமாகியுள்ளது.

அதனை குறிப்பிட்டு, தனது X தளத்தில் பதிவிட்ட உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ், “பா.ஜ.க ஆட்சியில், பொது மக்களுக்கு அதிகப்படியான ஜி.எஸ்.டி வரியும், பெரும் பணக்காரர்களுக்கு குறைந்த அளவிலான ஜி.எஸ்.டி வரியும் விதிக்கப்பட்டு வருகிறது. இதனால், இதுவரை சுமார் 63 இலட்சம் சிறு, குறு தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இலட்சக்கணக்கான மக்கள் வேலையிழந்துள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

இவரையடுத்து, பலரும் பா.ஜ.க ஆட்சியில் ஏற்பட்டுள்ள பொருளியல் இடர்பாடுகளை, தங்களது X தள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Also Read: இது தான் மோடி கூறும் வளர்ச்சியா? : சஞ்சய் ராவத் கேள்வி!