Politics

பாலியல் புகாரில் சிக்கிய ஆளுநருக்கு ஒன்றிய அரசு ஆதரவு... காவல்துறை அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை !

மேற்கு வங்க மாநிலத்தில் ஆளுநராக இருப்பவர் சி.வி.அனந்த போஸ். இந்த சூழலில் ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் பெண் ஒருவர், ஹரே ஸ்ட்ரீட் காவல் நிலையத்தில், ஆளுநர் சி.வி.அனந்த போஸ் மீது பாலியல் புகார் அளித்துள்ளார்.

அதில், தனது பதவி உயர்வுக்காக ஆளுநரை பிற்பகல் 12 .45 மணிக்கு சந்தித்ததாகவும், அப்போது ஆளுநர் அருவருக்கத்தக்க விதத்தில் தன்னை தொட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், மே இரண்டாம் தேதி ஆளுநர் தன்னை மீண்டும் அழைத்ததாகவும் கூறியுள்ளார்.

அதன்படி ஆளுநரை சந்திக்க தனது சூப்பர்வைசருடன் சென்றதாகவும், சற்று நேரத்தில் ஆளுநர் சூப்பர்வைசரை அனுப்பிவிட்டு தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த விவகாரம் பெரிதாக வெடித்ததை தொடர்ந்து மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் மீதான பாலியல் புகார் குறித்து விசாரிக்க கொல்கத்தா காவல்துறை துணை ஆணையர் இந்திரா முகர்ஜி தலைமையில் எட்டு பேர் குழுவை கொல்கத்தா போலீஸ் அமைந்தது. இதன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், பாலியல் புகாருக்கு ஆளான ஆளுநர் மேல் நடவடிக்கை எடுக்காமல் பாலியல் புகாரினை பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது ஒன்றிய அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன் மீது பாலியல் குற்றச்சாட்டு அளித்த பெண்ணுக்கு காவல்துறை அதிகாரிகள் உதவியதாக மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் ஒன்றிய அரசுக்கு புகார் ஒன்றை அளித்திருந்தார்.

அதில், மேற்கு வங்கத்தில் தேர்தல் வன்முறையில் பாதிக்கப்பட்ட நபர்கள் தன்னை காண வந்தபோது காவல்துறையினர் அனுமதிக்க வில்லை என்றும் கூறியிருந்தார். தற்போது அதன்பேரில் கொல்கத்தா காவல்துறை கண்காணிப்பாளர் மீதும், துணை கண்காணிப்பாளர்கள் மீதும் ஒன்றிய அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது ஐ.பி.எஸ் அதிகாரிகள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: 3 ஆண்டுகள் : விக்கிரவாண்டி தொகுதியில் திராவிட மாடல் அரசு நிறைவேற்றிய முத்தான திட்டங்கள் இதோ!