Politics

பீகாரில் அடுத்தடுத்து இடியும் பாலங்கள்: நிதிஷ்குமார் அரசை விமர்சித்த பாஜக- கூட்டணியில் மீண்டும் குழப்பம்?

பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு தற்போது ஒன்றன் பின் ஒன்றாக பாலங்கள் தொடர்ந்து இடிந்து விழும் சம்பவம் அடுத்தடுத்து நடப்பது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் தற்போது மழை பெய்து வரும் நிலையில், அங்கு பல்வேறு பகுதிகளில் இருக்கும் பாலங்கள் அடுத்தடுத்து என இடிந்து விழுந்து வருகிறது. ஏற்கனவே அங்கு புதிதாக கட்டிக்கொண்டிருந்த பாலம், கட்டி முடித்து திறப்புக்கு காத்திருந்த பாலம் என அடுத்தடுத்து தொடர்ந்து சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது.

அதுவும் 2 வாரத்தில் 10 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளது ஆளும் அரசுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. மாநில அரசு பாலங்களை சரியாக அமைக்காததும், இருக்கும் பாலங்களை பழுது பார்காததுமே இந்த தொடர் நிகழ்வுகளுக்கு காரணம் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Nikil anand

இந்த நிலையில், இரண்டு வாரங்களில் 10 பாலங்கள் இடிந்து விழுந்த விவகாரத்தில் 11 அரசு பொறியாளர்களை சஸ்பெண்ட் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதே நேரம் பாலம் வழியாக செல்வதற்கே பயமாக இருக்கிறது. எந்தப் பாலம் எப்போது சேதமடையும் என்பது தெரியவில்லை என மாநில அரசை கூட்டணியில் இருக்கும் பாஜகவே விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாநில பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நிகில் ஆனந்த், தனது சமூகவலைத்தள பக்கத்தில், " பீகாரில் மேம்பாலம், பாலங்கள் வழியாக செல்வதற்கே இப்போது பயமாக இருக்கிறது. எந்தப் பாலம் எப்போது சேதமடையும் என்பது தெரியவில்லை. இந்தப் பாலங்களை கட்டிய கட்டுமான நிறுவனத்தின் மீதும், பொறியாளர்கள் மீதும் விசாரணை நடத்த வேண்டும். அவர்களை கறுப்புப் பட்டியலில் வைக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.நிதிஷ் குமார் தலைமையிலான அரசை கூட்டணி கட்சியான பாஜகவே விமர்சித்துள்ளது மாநிலத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: Twitter-க்கு போட்டியாக பாஜகவால் பிரபலப்படுத்தப்பட்ட Koo செயலி... நிரந்தர மூடுவதாக வெளியான அறிவிப்பு !