Politics

மோடி vs ராகுல் : மக்களை அதிகம் ஈர்த்தது யார் ? காட்டிக்கொடுத்த ஒன்றிய அரசின் அதிகாரப்பூர்வ Youtube சேனல்!

நடந்து முடிந்த தேர்தலில் பாஜக பெரும்பான்மையை இழந்த நிலையில், கூட்டணி ஆட்சிகளின் உதவியோடு மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இந்த சூழலில் கடந்த ஜூன் 24-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் குடியரசு தலைவர் உரை மீதான விவாதம் மக்களவையில் நடைபெற்றபோது, எதிர்க்கட்சியினர் பாஜகவின் உண்மை முகத்தை தோலுரித்தனர்.

குறிப்பாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பாஜகவையும், மோடியையும் வெளுத்து வாங்கினார். மக்களவையில் ராகுல் காந்தியின் பேச்சுக்கு பாஜகவினர் மற்றும் மோடி ஆடிப்போய் அமர்ந்திருந்தனர். தொடர்ந்து மோடி உரையின்போதும், எதிர்க்கட்சிகள் கேள்விகளால் துளைத்தெடுத்தனர். இதனால் மோடியின் முகத்தில் ஒரு பீதியே தெரிந்தது என்று இணையவாசிகள் விமர்சித்து வந்தனர்.

மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் அரசியல் சாசனம் குறித்த மோடியின் பொய் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை பேச சபாநாயகர் அனுமதிக்காததால், எதிர்க்கட்சியினர் கண்டன முழக்கங்கள் எழுப்பி வெளிநடப்பு செய்தனர். இப்படி அனைத்து பக்கங்களிலும் இருந்து மோடி மற்றும் பாஜகவினருக்கு இந்தியா கூட்டணி கட்சி எம்.பி-க்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

தொடர்ந்து ராகுல் காந்தியின் உரை நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் தற்போதுள்ள எதிர்க்கட்சி பெரும் பலத்துடன் நாடாளுமன்றத்தில் நுழைந்துள்ளது, இதன் மூலம் பாஜகவுக்கு மேலும் புரிவது அறியமுடிகிறது. எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் ஆதரவு இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றாக இருந்தாலும், தற்போதும் அதனை மேலும் நிரூபிக்கும் வகையில், ராகுலின் பேச்சு நாடாளுமன்ற மக்களவையின் அதிகார தொலைக்காட்சியான Sansad TV-யின் Youtube பக்கத்தில் அதிக பார்வையாளர்களை கடந்துள்ளது.

அதன்படி,

* மக்களவையின் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உரை - 8.25 இலட்சம் பார்வையாளர்கள்! (ஒரே காணொளி)

* சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் மக்களவை உரை - 4.27 இலட்சம் பார்வையாளர்கள்! (ஒரே காணொளி)

* ஆனால், பிரதமர் மோடியின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உரைகள் - 1.56 இலட்சம் பார்வையாளர்கள் (மூன்று காணொளிகள்)

முன்னதாக தேர்தல் பிரசாரத்தின்போதும், மோடியின் பேச்சுக்கு ராகுல் பதிலடி கொடுத்து பேசியது மக்களை அதிகளவில் ஈர்த்தது. மேலும் கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இதே போல் மோடியின் உரையை விட ராகுல் காந்தியின் உரையே மக்களவை கவர்ந்தது. இந்த சூழலில் மீண்டும் மோடியின் உரையை விட ராகுல் காந்தியின் உரை மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: மீண்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சராகும் ஹேமந்த் சோரன்!