Politics

பொருளற்று பேசும் மோடி! : சபாநாயகருக்கு கடிதம் எழுதிய எம்.பி மாணிக்கம் தாகூர்!

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு பதிலுரை அளித்த மோடி, தம் தோல்வியை மறைக்க, பல பொய் குற்றச்சாட்டுகளையும், பொருளற்ற குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார்.

அதிலும், குறிப்பாக தேர்தல் பிரச்சாரத்தின் போது, இந்தியா கூட்டணி முன்வைத்த வாக்குறுதியான உழைக்கும் சமூகத்தினரின் பெண்களுக்கு, மாதம் ரூ. 8,500 வழங்கப்படும் என்பதை சுட்டிக்காட்டி, யாருக்கும் ரூ. 8,500 வரவில்லை என்றும், 16 மாநிலங்களில் காங்கிரஸின் ஓட்டு விழுக்காடு குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனால், அவையில் சலசலப்பு ஏற்பட்டது. ஆட்சியைப் பிடித்தால், பெண்களுக்கு ரூ. 8,500 வழங்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில், எதிர்க்கட்சியாக இருக்கும் போது எவ்வாறு ரூ. 8,500 வழங்கப்படும் என்றும், கடந்த 2019 தேர்தலை ஒப்பிடுகையில், பல மாநிலங்களில் காங்கிரஸ் ஓட்டு விழுக்காடு அதிகரித்துள்ளது என்றும் எதிர்க்கட்சிகள், மோடியின் உரையின் போது எதிர் முழக்கமிட்டனர்.

இந்நிலையில், நாடாளுமன்ற விவகாரங்கள் விதி 115(1)இன் படி, பிரதமர் மோடியின் உரையில் பொய்களும், பொருளற்ற கருத்துகளுமே, அதிகம் இடம்பெற்றிருக்கின்றன என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு, காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கடிதம் எழுதியுள்ளார்.

மேலும், காங்கிரஸ் ஆட்சியில் இராணுவத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்த மோடி, இது போன்று தவறாக மக்களை வழிநடத்துவது கடும் கண்டனத்திற்குரியது என்றும், தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வரவேற்பு : திரண்ட ஆயிரக்கணக்கான ரசிகர்கள்... ஸ்தம்பித்த மும்பை !