Politics

3 புதிய குற்றவியல் சட்டம் : “ஜனநாயக உணர்வில்லாத பாஜக அரசு” - அமித்ஷாவுக்கு NR இளங்கோ எம்.பி பதிலடி !

இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகிய 3 சட்டங்களுக்கு பதிலாக, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா மற்றும் பாரதிய சாக்ஷியா என்ற 3 புதிய குற்றவியல் மசோதாக்கள், கடந்த ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பா.ஜ.க அரசு அறிமுகப்படுத்தியது.

அந்த சமயத்தில் மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட நாட்டின் பிரச்னைகளை விவாதிக்க மறுத்த பாஜக அரசை கண்டித்து, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பி வந்ததால், அவர்களில் பலரையும் சஸ்பெண்ட் செய்துவிட்டு, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகள் இல்லாமலே சூழ்ச்சி செய்து இந்த சட்டம் நிறைவேற்றியது ஒன்றிய பாஜக அரசு.

இதைத்தொடர்ந்து இந்த சட்டங்களுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். எனினும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்புகளையும் மீறி இந்த புதிய 3 குற்றவியல் சட்டங்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்தார். இந்த சட்டங்களை மட்டுமின்றி, சமஸ்கிருதத்தில் பெயர்கள் வைக்கப்பட்டதற்கும் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது.

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் கடந்த ஜூலை 1-ம் தேதி இந்த சட்டங்கள் அமலுக்கு வந்தது. இந்த சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சி தலைவர்கள், வழக்கறிஞர்கள் சங்கம் என பலரும் கண்டனங்களும் போராட்டங்களுக்கு நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் சட்டம் நடைமுறைக்கு வந்த முதல்நாளே டெல்லியில் சாலையோர வியாபாரி மீது முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாஜக அரசு கொண்டு வரும் அனைத்து சட்டங்களும் சாதாரண மக்களுக்கு பாதகமாகவும், பணக்காரர்களுக்கு சாதகமாகவுமே இருக்கும். இந்த சட்டங்களும் அதே போல் உள்ளது என்று, இந்த சம்பவத்தின் வாயிலாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியா கூட்டணி கட்சிகள் புதிய குற்றவியல் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் புதிய மூன்று குற்றவியல் சட்டங்களின் பெயர்களுக்கான எதிர்ப்பு குறித்து கலந்தாலோசிக்க நேரம் கோரவில்லை என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளதாக 'தி இந்து' ஆங்கில நாளேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சூழலில் ஒன்றிய உள்துறை அமைச்சரின் பேச்சுக்கு திமுக எம்.பி-யும் சட்டத்துறைச் செயலாளருமான என்.ஆர்.இளங்கோ பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு வருமாறு :

ஒன்றிய உள்துறை அமைச்சர் அவர்கள், "புதிய மூன்று குற்றவியல் சட்டங்கள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இதன் செயல்முறையும் தமிழில் நடைபெறும். தமிழ்நாடு முதலமைச்சரோ, நாடாளுமன்ற உறுப்பினர்களோ இவற்றின் பெயர்களுக்கான அவர்களின் எதிர்ப்பு குறித்து கலந்தாலோசிக்க நேரம் கோரவில்லை.

நான் அவர்களிடம் மீண்டும் கூறிக்கொள்கிறேன். உங்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் என்னைச் சந்தியுங்கள். சட்டங்களைப் புறக்கணிப்பது சரியாகாது" என்று இச்சட்டங்கள் தொடர்பாகத் தமிழ்நாடு முதலமைச்சரின் ஆட்சேபணை தொடர்பாகக் கருத்து தெரிவித்திருப்பதாக, 'தி இந்து' ஆங்கில நாளேட்டில் செய்தி வெளியாகியுள்ளது.

புதிய மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு சமஸ்கிருதத்தில் பெயரிடுவதற்கு நாடாளுமன்றத் தேர்வுக் குழுவில் நாங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தோம். இச்சட்ட முன்வடிவுகள் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டபோது, நாடாளுமன்ற அவைக்குள் நடந்த அத்துமீறல் குறித்து எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தனர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

ஒன்றிய அரசுக்கு உண்மையாகவே ஜனநாயக உணர்வு இருக்குமானால், எதிர்க்கட்சியினர் அவையினில் இல்லாதபோது இந்தச் சட்டங்களை நிறைவேற்றியிருக்கக் கூடாது. ஜனநாயகத்தைக் கடைப்பிடியுங்கள், போதிக்காதீர்கள்!"

Also Read: ஹத்ராஸ் ஆன்மிக நிகழ்ச்சி சம்பவம் : அதிகரிக்கும் பலி எண்ணிக்கை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் !