Politics

“பாஜகவின் அரசியல் சூனிய வேட்டையே ஹேமந்த் சோரனின் கைது” - ஜாமீனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு !

நில மோசடி, சட்டவிரோத பணப் பரிமாற்றம் உள்ளிட்ட வழக்குகளில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தபோது ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியது. ஆரம்பத்தில் சம்மனை புறக்கணித்து வந்த நிலையில், பின்னர் கடந்த ஜனவரி மாதம் 31-ம் தேதி அவர் நேரில் ஆஜரானபோது, அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற விசாரணைக்கு பிறகு ஹேமந்த் சோரன் முதலமைச்சராக இருந்தபோது அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். பாஜகவின் சூழ்ச்சியை அறிந்த ஹேமந்த் சோரன், தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, அமைச்சராக இருந்த சம்பாய் சோரன் முதலமைச்சராக அறிவித்தார். அதன்படி தற்போது சம்பாய் சோரன் அம்மாநில முதலமைச்சராக உள்ளார்.

இதைத்தொடர்ந்து அவர் ஜார்க்கண்டில் அமைந்துள்ள பிர்ஸா முண்டா சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து அவர் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணை நடைபெற்று வந்தது. தொடர்ந்து பல முறை அவருக்கு ஜாமீன் வழங்க அம்மாநில உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து வந்தது.

இதையடுத்து அவரது உறவினர் இறப்பின் இறுதிச்சடங்கில் பங்கேற்க 3 நாள் ஜாமீன் கேட்ட நிலையில், ஒரே ஒரு நாள் மட்டுமே (மே 6) ஜாமீன் வழங்கப்பட்டது. இருப்பினும் மீண்டும் ஜாமீன் கேட்டு முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சுமார் 150 நாட்களுக்கு பிறகு (5 மாதங்கள்) ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் கிடைத்து வெளியே வந்துள்ளார். ஹேமந்த் சோரனுக்கு மக்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் என பலரும் வாழ்த்துகளும் வரவேற்புகளும் அளித்து வருகின்றனர். இந்தியா கூட்டணியின் ஒரு அங்கமாக இருக்கும் ஹேமந்த் சோரனுக்கு இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றத்தை தீர்ப்புக்கு வரவேற்பளித்துள்ளார். இதுகுறித்து அவரது சமூக வலைதள பதிவு வருமாறு :

“தேர்தலுக்கு முன்னதாக ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டது கருத்து வேறுபாடுகளை நசுக்க ஒன்றிய அரசு திட்டமிட்டு நடத்திய அரசியல் சூனிய வேட்டையாகும். பழங்குடியினத்தை சேர்ந்த திறமையான ஒரு தலைவரின் முதலமைச்சர் பதவியைப் பறித்து, ஐந்து மாதங்கள் சிறையில் அடைத்து, பிரச்சாரம் செய்வதிலிருந்து அவரை தடுத்துள்ளார்கள். ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்ற உத்தரவை வரவேற்கிறேன்.”

Also Read: 150 நாட்களுக்கு பிறகு ஜாமீன்... வெளியே வந்த ஹேமந்த் சோரனுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு !