Politics

"கட்சிக்கு திரும்ப வர விரும்புபவர்கள் வரலாம்" - அஜித் பவார் எம்.எல்.ஏ.க்களுக்கு சரத் பவார் அழைப்பு !

மகாராஷ்டிராவில் 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து இரண்டரை ஆண்டுகள் சிவசேனாவை சேர்ந்தவர் முதல்வராக இருக்க ஒப்புதல் கொடுத்தால் பாஜகவுடன் கூட்டணி ஆட்சி அமைக்க தயார் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்தார்.

ஆனால் இதற்கு உடன்படாத பாஜக தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி வைத்தது.அதைத் தொடர்ந்து பாஜக சார்பில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பொறுப்பேற்றார்.ஆனால் இந்த அரசு சில நாட்களில் கவிழ்ந்தது. அதன்பின்னர் காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸுடன் சிவசேனா கூட்டணி வைத்த நிலையில் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்றார்.

சுமார் 3 ஆண்டுகள் நீடித்த இந்த அரசு சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவான எம்.எல்.ஏக்கள் மூலம் கவிழ்ந்தது. அதைத் தொடர்ந்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏக்களை வைத்து பாஜக ஆட்சிக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில் ஏக்நாத் ஷிண்டேவே முதல்வராக பொறுப்பேற்றார். துணை முதல்வர் பதவி பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ்க்கு வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சிவசேனா பணியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை பாஜக உடைத்ததில், அக்கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் தலைமையில் 29 எம்.எல்.ஏக்கள் பாஜக கூட்டணி அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். அதில் 8 பேருக்கு உடனடியாக ஆளுநர் அமைச்சராக பதவியேற்பு நடத்திய நிலையில், அஜித் பவாருக்கு துணை முதல்வர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. அதே நேரம் சரத் பவாரின் கட்சி பெரும் வெற்றியை பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து அஜித் பவார் அணியை சேர்ந்த 18 முதல் 19 எம்.எல்.ஏ.க்கள் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேர இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், கட்சிக்கு திரும்ப வர விரும்பும் எம்.எல்.ஏ.க்கள் தாராளமாக வரலாம் என்று சரத் பவார் வெளிப்படையாக அறிவித்துள்ளார். கட்சியின் மூத்த நிர்வாகிகளுடனான கூட்டத்துக்கு பின்னர் பேசிய சரத் பவார், " சிலர் கட்சியில் பயனடைந்துவிட்டு கட்சிக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர். எனினும் கட்சிக்கு திரும்ப வர விரும்பும் எம்.எல்.ஏ.க்கள் தாராளமாக வரலாம். அவர்களை வரவேற்கிறோம்.

அதே நேரம் அப்படி வருபவர்கள் கட்சியை வலுப்படுத்துபவர்களாகவும், கட்சியின் மதிப்பை உயர்த்துபவர்களாகவும் இருக்கவேண்டும். அவர்களுக்காக கட்சியின் கதவு திறந்தே இருக்கிறது" என்று கூறியுள்ளார். இதன் காரணமாக விரைவில் சரத் பவாரின் கட்சியில் அஜித் பவார் பக்கம் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.