Politics

நீட் முறைகேடுகள் குஜராத், பீகாரை மையமாக வைத்தே அரங்கேறியுள்ளது - ராஷ்டிரிய ஜனதா தளம் குற்றச்சாட்டு !

நடப்பு ஆண்டில் நடைபெற்ற நீட் தேர்வில் இதுவரை இல்லாத அளவு மோசடி நிகழ்ந்துள்ளது. ஆள் மாறாட்டம், தேர்வு வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் என பல வழிகளில் முறைகேடு நடந்துள்ளது. தொடர்ந்து நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்து மறு தேர்வு நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வலுத்தது.

இது குறித்து தற்போது வரை 20 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ரவி அத்ரி என்பவரும் கைது செய்யப்பட்டார். பின்னர் கைது செய்யப்பட்டவர்களிடம் நடைபெற்ற விசாரணையில் கேள்வித்தாள் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் இருந்து கசிந்தது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குளறுபடிகள் அனைத்தும் குஜராத், பீகார் மாநிலங்களை மையமாக வைத்தே அரங்கேறி இருப்பதாக ராஷ்டிரிய ஜனதா தளம் குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்துப் பேசிய அவர், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான மனோஜ்குமார் ஜா வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், நாடு முழுவதும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குளறுபடிகள் அனைத்தும் குஜராத், பீகார் மாநிலங்களை மையமாக வைத்தே அரங்கேறி இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் பீகாரில் பா.ஜ.க. ஐக்கிய ஜனதா தள கூட்டணி அரசு நீட் முறைகேட்டில் தொடர்புடைய குற்றவாளிகளை பாதுகாப்பதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.

பல்வேறு முறைகேடுகள் அரங்கேறிய இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனோஜ்குமார் ஜா வலியுறுத்தியுள்ளார். ஒன்றிய அரசு மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாட முடியாது என்றுதெரிவித்துள்ள அவர்,தேசிய தேர்வு முகமை ஒரு மோசடி நிறுவனம் என்றும், அந்த அமைப்பு கலைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ஒன்றிய அரசால் வினாத்தாள் கசிவின்றி ஒரு தேர்வைக்கூட நடத்த முடியாது என்றும், ஒன்றிய அரசு முழுமையாக தோல்வி அடைந்து விட்டதாகவும் விமர்சித்துள்ளார். மேலும், நீட் தேர்வு குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய அரசு, மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Also Read: பழனிசாமிக்கு கள்ளக்குறிச்சியைப் பற்றி பேச யோக்கியதை இருக்கிறதா? - வெளுத்து வாங்கிய முரசொலி !