Politics

"பேரவையில் ஜனநாயகக் கடமையை ஆற்றாமல், வீண் விளம்பரத்தை தேடுகிறது அதிமுக" - முதலமைச்சர் குற்றச்சாட்டு !

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தொடர்ந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு, சபை நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து இடையீடு செய்து வந்தனர். இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுக்க அ.தி.மு.க. உறுப்பினர்கள் இந்த செயலை தொடர்ந்து செய்து வந்தனர்.

இதன் காரணமாக நேற்று ஒருநாள் மற்றும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் பேரவையில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இன்று மீண்டும் சட்டப்பேரவை கூட்டப்பட்ட நிலையில், மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். அதனை தொடர்ந்து அவர்கள் இந்த கூட்டத்தொடர் முழுக்க பேரவையில் பங்கேற்க தடை விதித்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

இதனிடையே தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க. உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டதற்குப்பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

அதன் விவரம் :

மாண்புமிகு முதலமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிக் கட்சியினர், குறிப்பாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எழுப்ப விரும்பும் கேள்விகள் தொடர்பாக பதிலளிக்க இந்த அரசு தயாராக உள்ளது என்று சட்டமன்றம் தொடங்கிய முதல் நாளிலிருந்தே தெளிவாக இந்த அவையில் தெரிவித்து வருகிறேன். தாங்களும் அதைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்.

ஆனாலும், மக்கள் பிரச்சினையைப் பற்றி இப்பேரவையில் பேச வாய்ப்பளிப்பதாகத் தெரிவித்தும், அதை ஏற்க மனமில்லாமல், எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் வெளியில் சென்று பேசுவது என்பது இந்தப் பேரவையினுடைய மாண்புக்கும், மரபுக்கும் ஏற்புடைய செயல் அல்ல. பிரதான எதிர்க்கட்சியாகச் செயல்பட வேண்டிய அ.தி.மு.க. மக்களுக்கு ஆற்ற வேண்டிய ஜனநாயகக் கடமையை ஆற்றாமல், வீண் விளம்பரத்தைத் தேடுவதிலேயே முனைப்பாக உள்ளது. ஆனால், நாம் இந்தத் துயர சம்பவம் குறித்து உண்மையான அக்கறையுடன் உரிய நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொண்டிருக்கிறது. இதுதான் நமக்கும், அவர்களுக்கும் உள்ள வேறுபாடு" என்று கூறினார்.

Also Read: பாஜக ஆளும் மாநிலங்களில் கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு CBI விசாரணை நடத்தப்பட்டதா? - சிலந்தி கேள்வி- பதில்!