Politics

நாடாளுமன்ற மரபினை மீறிய பாஜக அரசு : தற்காலிக துணை சபாநாயகர் பதவியை மறுத்த இந்தியா கூட்டணி !

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற நிலையில், இதில் கூட்டணி கட்சிகளின் உதவியோடு பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இந்த சூழலில் 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று (ஜூன் 24) கூடவுள்ளது.

இதில் இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள பாஜக எம். பி பார்த்ருஹரி மஹ்தாப்க்கு குடியரசுத்தலைவர் 10 மணிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி-க்கள் பதவியேற்று கொண்டனர்.

தற்காலிக சபாநாயகர் பதவி எப்போதும் நாடாளுமன்றத்தின் மூத்த எம்.பி.க்கு வழங்கப்படுவது மரபு. அந்த வகையில் காங்கிரஸை சேர்ந்த கொடிக்குன்னில் சுரேஷ் 8-வது முறையாக எம்.பி-யாக இருக்கும் நிலையில், அவரை விட நாடாளுமன்றத்தில் இளையவரான பாஜகவை சேர்ந்த பர்த்ருஹரி மஹ்தாப் என்பவரை பாஜக அரசு தற்காலிக சபாநாயகராக நியமித்தது.

kodikunnil suresh

இதற்கு இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். தெடர்ந்து தற்காலிக துணை சபாநாயகர் பதவி இந்தியா கூட்டணி கட்சி எம்.பிகளுக்கு வழங்க பாஜக அரசு முன்வந்த நிலையில், அதற்கு இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் மறுப்பு தெரிவித்தனர்.

அந்த வகையில், கொடிக்குந்நில் சுரேஷ், டி ஆர் பாலு, சுதீப் பந்தோபாத்தியாயா ஆகிய மூன்று பேரும் துணை சபாநாயகர் பதவியை ஏற்க மறுத்தனர். தற்காலிக உதவி சபாநாயகர்களாக பதவியேற்க அழைக்கப்பட்டபோது, திமுக எம்.பி. டி .ஆர். பாலு எழுந்து அந்த பொறுப்பை ஏற்க எதிர்ப்பு தெரிவித்து சபாநாயகர் இடம் வழங்கியுள்ள கடிதத்தை வாசிக்குமாறு வலியுறுத்தினார். ஆனால் அதனை சபாநாயகர் வாசிக்க மறுத்தார். பின்னர் பதவியேற்க அழைத்த போது கொடிக்குந்நில் சுரேஷ், டி ஆர் பாலு, சுதீப் பந்தோபாத்தியாயா ஆகிய மூன்று பேரும் அதனை நிராகரித்தனர்.