Politics

பிரஜ்வல் ரேவண்ணாவின் சகோதரர் பாலியல் வழக்கில் கைது : தொடர்ந்து சிக்கும் குடும்ப உறுப்பினர்கள் !

பாஜகவின் கூட்டணி கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் (JDS) முன்னாள் எம்.பியுமாக இருந்தவர் பிரஜ்வல் ரேவண்ணா. இவர் பாஜக கூட்டணி சார்பில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இவர் தொடர்பான ஆபாச வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்திற்கு ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர்.

பெண்களின் பாதுகாவலர்கள் நாங்கள் என்று சொல்லும் பா.ஜ.க எப்படி, இப்படி ஒருவரை தேர்தலில் போட்டியிட அனுமதித்தது? என்ற கேள்வியும் எழுந்தது. அதனைத் தொடர்ந்து பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாடு தப்பி சென்றார். பின்னர் கடும் நெருக்கடிக்கு மத்தியில் இந்தியா திரும்பிய அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், அவரின் சகோதரரான சூரஜ் ரேவண்ணா பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். வேலை வாங்கித்தர அணுகியபோது பாலியல் தொந்தரவு கொடுத்ததாக JDS கட்சி ஊழியர் அளித்த புகாரின்பேரில் சூரஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த சூழலில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சூரஜ் ரேவண்ணாவின் சகோதரரான பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கில் சிறையில் இருக்கும் நிலையில், அவரின் தந்தை ரேவண்ணா பெண் கடத்தல் வழக்கில் ஜாமினில் வெளிவந்துள்ளார். தற்போது பாலியல் வழக்கில் சூரஜ் ரேவண்ணாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

Also Read: வடமாநிலங்களுக்கு நவீன ரயில்பெட்டிகள், தமிழ்நாட்டுக்கு ஓட்டை உடைசல் பெட்டிகள் : உயர்நீதிமன்றம் அதிருப்தி!