Politics

வீண் பழி சுமத்தும் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் : தி.மு.க தலைமை கண்டனம்!

கள்ளக்குறிச்சியில் 50க்கும் மேற்பட்டோர், விஷச்சாராயம் குடித்து உயிரிழந்ததையடுத்து, அதற்காக தமிழ்நாடு அரசு துரித நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் வேளையில்,

தங்களின் சொந்த அரசியல் ஆதாயத்திற்காக, தி.மு.க.வினரை தொடர்புபடுத்தி வீண் பழி சுமத்தியுள்ளனர் பா.ம.க தலைவர்கள் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி, “கள்ளக்குறிச்சி சம்பவத்தில், அரசியல் ஆதாயத்திற்காக திமுக எம்.எல்.ஏ-க்கள் மீது அவதூறு குற்றச்சாட்டை சுமத்திய, பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடரப்படும்” என எச்சரித்துள்ளார்.

அவரை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த, தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் வசந்தம் கார்த்திகேயன் மற்றும் உதய சூரியன்,

“கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அபாயகரமான குற்றச்சாட்டை பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களுக்கும் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கும் வைத்து வருகின்றனர். இறந்தவர்கள் வீட்டில் ஆதாயம் தேட நினைக்கும் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம்.

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அங்கு வந்த டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் அவர்களை புறக்கணித்ததை மறைக்கும் வகையில், கடந்த அதிமுக ஆட்சியிலும், தற்போது பாஜக ஆட்சி செய்யும் பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் கள்ளச்சாராய விவகாரங்கள் பற்றி எல்லாம் வாய் திறக்காமல், இந்த விவகாரத்தை பற்றி பேசி வருகிறார்.

அவர்கள் எங்கள் மீது வைத்த குற்றச்சாட்டை நிரூபித்தால் நாங்கள் பொது வாழ்வில் இருந்து வெளியேறுகிறோம்.

அதே வேளையில் அதை நிரூபிக்க தவறினால் அவர்கள் அரசியலில் இருந்து விலகுவார்களா?

என்னுடைய சொந்த ஊர் கள்ளக்குறிச்சி பகுதியில் தான் உள்ளது. ஒரு மணிக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்கள் யாரும் இறக்கவில்லை மருத்துவரிடம் விசாரித்தபோது நாங்கள் அவர்கள் என்ன சாப்பிட்டு இருக்கிறார்கள் என்று சோதித்த பிறகு தான் எங்களால் சொல்ல முடியும் எனக் கூறினார்கள்.

மூவரும் இறந்த போது அவர்கள் மருத்துவமனையில் இல்லை, இல்லத்தில் இருந்து தான் இறந்திருக்கிறார்கள்.

பாதிக்கப்பட்ட மக்களோடு, இரண்டு எம்.எல்.ஏ.க்களும் நான்கு நாட்களாக அங்கே தான் இருந்தோம்.

அங்கே இருந்து தேவையான உதவிகளை செய்து வருகிறோம். பாதிக்கப்பட்ட நபர்களை அவசர ஊர்தி மூலம் பல்வேறு பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம்.

எனினும், எங்கள் மீது வீண் பழி சுமத்தியிருக்கிறார்கள். அவர்களுக்கு எதிராக மானநஷ்ட ஈடு வழக்கு தொடர உள்ளோம்” என தெரிவித்துள்ளனர்.

Also Read: சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு, துறைசார்ந்த அமைச்சர்களின் பதில்! : சட்டமன்ற கூட்டத்தொடர்!