Politics

144 தடை உத்தரவிற்கும், இணைய முடக்கத்திற்கும் பெயர்போன பா.ஜ.க! : ஆட்சிக்கு வந்த பின் ஒடிசாவிலும் அமல்!

இந்திய நாட்டில், வேற்றுமைகள் பெருமளவில் காணப்பட்டாலும், அதனை அரசின் நடவடிக்கைகள் மூலம் ஒற்றுமை உணர்வுகளாக மாற்ற, பல ஆண்டுகளாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதிலும், குறிப்பாக வேற்றுமையை வென்று, அமைதியை நிலைநாட்டி வருகிற முக்கிய மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.

தமிழ்நாட்டில் தாமரை மலராததற்கு, இதுவே முதற் மற்றும் முக்கிய காரணமாகவும் இருக்கிறது.

இந்தியாவிலேயே சமூதிநீதியின் வழி பெருவளர்ச்சி கண்ட தமிழ்நாட்டில் பொருளாதார வேற்றுமை கூட பெருமளவு இல்லை. அனைவரும் கல்வி கற்க வேண்டும், உயர்ந்த பதவிகளில் மாணவர்கள் பணியமர்த்தப்பட வேண்டும், தொழில் முனைவுகளுக்கு வழி வகுக்க வேண்டும் என தமிழ்நாட்டில் செயல்படுத்துகிற திட்டங்கள் ஏராளம்.

அதற்கு எடுத்துக்காட்டுகளே, நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் உள்ளிட்ட திட்டங்கள்.

ஆனால், இத்தகைய ஆட்சிக்கு முற்றிலும் மாறான ஒரு ஆட்சியை செயல்படுத்தி வருகிற கட்சியாக தான் பா.ஜ.க அடையாளப்பட்டு வருகிறது.

அதற்கு எடுத்துக்காட்டே, பா.ஜ.க ஆளும் மாநிலங்களில், கடந்த ஆண்டு உச்சம் தொட்ட கலவரங்கள்.

கடந்த ஆண்டிற்கு முந்தைய காலங்களிலும், இந்தியாவின் பல பகுதிகளில் இனக்குழுக்களிடையே தருக்கம் ஏற்பட்டு வந்தாலும், அதனை பா.ஜ.க.விற்கு முந்தைய அரசுகள் ஓரளவு ஒழுங்குபடுத்தி வந்த நிலையில்,

ஆட்சியை கைப்பற்றி சில மாதங்களில் அல்லது வருடங்களில், முந்தைய அரசுகளால் ஒழுங்கிபடுத்தி வந்த தருக்கங்களை வளர்த்து கலவரமாக்கியதில் பா.ஜ.க.விற்கு பெரும் பங்குண்டு.

அவ்வாறு, முடுக்கிவிடப்பட்ட கலவரங்களில் ஒன்று தான் மணிப்பூர் கலவரம். இதனால், மக்களும் மணிப்பூர் மீது கடும் அதிருப்தியடைந்து, அண்மையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், பா.ஜ.க.வை முழுமையாக புறக்கணித்தனர்.

இதே நிலை தான், பா.ஜ.க ஆளும் மற்றொரு உத்தரப் பிரதேசத்திலும்,

இந்தியாவிலேயே, இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியாக கருதப்படும் உத்தரப்பிரதேசத்தில் உள்ள இஸ்லாமிய ஆலைகளை தகர்த்து, இந்துக்களுக்கும் - இஸ்லாமியர்களுக்கும் இடையில் எண்ணற்ற சிக்கல்களை வளர்த்த அரசு தான், பா.ஜ.க அரசு.

அதன் காரணமாகவே, பல்வேறு சர்ச்சைகளுடன் கட்டி எழுப்பப்பட்ட ராமர் கோவில் கோவில் அமைந்துள்ள ஃபைசாபாத் தொகுதி, காங்கிரஸ் வசமானது.

இதற்கு உத்தரகாண்ட் மாநிலமும் விலக்கல்ல. ஏறக்குறைய 100 ஆண்டுகள், இஸ்லாமிய பிற்படுத்தப்பட்டவர்களுக்கு கல்வி, வணிகம் போன்றவற்றை வழங்கி, பெரும் துணையாக இருந்த அல்துவானி என்ற இடத்திலிருந்து, இஸ்லாமியர்களை வெளியேற்ற பல பணிகளை செய்து வருகிறது பா.ஜ.க.

இது போன்ற காரணங்களால், மக்களால் உரிமைக்குரல் எழுப்பப்படும் போது, அதனை தடுக்க, ஊரடங்குகளை பிறப்பித்தும், இணைய முடக்கங்களில் அமல்படுத்தியும், மக்களை வஞ்சித்து வருகிறது பா.ஜ.க.

அதனால், கடந்த ஆண்டிற்கான தரவரிசையில் கூட, உலகிலேயே அதிகளவில் இணைய முடக்கம் செய்யும் நாடு என்ற அவப்பெயரை பெற்றது, உலகின் பெரிய ஜனநாயகமான இந்தியா.

இந்நிலையில், பா.ஜ.க.வினால், வஞ்சிக்கப்படும் மாநிலங்களில் புதிதாக இணைந்துள்ளது ஒடிசா.

கடந்த 24 ஆண்டுகளாக பிஜு ஜனதா தளத்தின் கீழ், ஆட்சி செய்யப்பட்ட ஒடிசா, மாற்றத்தை தேடி, புதைகுழியில் விழுந்திருக்கிறது என்று எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டு வந்த அனைத்தும், உண்மையாகியுள்ளது.

அதன்படி, இதுவரை பிஜு ஜனதா அரசால் ஒழுங்குபடுத்தி வந்த இன வேற்றுமை, பா.ஜ.க ஆட்சிக்கு பின் கிளர்ந்தெழுந்து, தற்போது அங்கும், ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, இணைய முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதனால், மணிப்பூரைப் போல, ஒடிசாவிலும் என்ன நடக்கிறது என வெளி உலகம் அறியமுடியாத சூழல் உருவாகியுள்ளது.

இதன் காரணமாக, வீட்டை விட்டு வெளிவர முடியாமலும், இணைய தொடர்பு இல்லாமலும் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இது கலவர காலங்களில் மட்டும் அமல்படுத்தப்படுவது அல்ல. உத்தர பிரதேசத்தில் நொய்டா போன்ற பகுதிகளில், இஸ்லாமிய விழாக்கள் நடைபெறும் நாட்களில் கூட ஊரடங்கு அறிவிக்கப்படுவது ஒரு வழக்கமாகவே மாறியுள்ளது.

பா.ஜ.க ஆளும் சில மாநிலங்களில், சட்டமன்ற கூட்டத்தொடர் நடக்கும் வேளையில், சட்டமன்றத்தை சுற்றி, சில நூறு மீட்டர்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்படுவதும் பா.ஜ.க.வின் வழக்கமாக மாறியுள்ளது.

ஆகையால், சுதந்திரம் அடைந்த நாட்டில், சுதந்திரத்தை பறிக்கும் பா.ஜ.க.வின் ஆட்சிக்கு கண்டனங்கள் வலுக்கத்தொடங்கியுள்ளன.

Also Read: அனைத்து மீனவர்களை விடுவிக்க வேண்டும் : ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!