Politics

சபாநாயகர் தேர்தல்: தெலுங்கு தேசம் கட்சி போட்டியிட்டால் இந்தியா கூட்டணி ஆதரவு- சிவசேனா (உத்தவ்) அறிவிப்பு!

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற 18-வது மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை கடந்த ஜூன் 4-ம் தேதி நடைபெற்ற நிலையில், இதில் இந்தியா கூட்டணி 234 இடங்களையும் பாஜக கூட்டணி 292 இடங்களையும் பிடித்துள்ளது.பாஜக தனித்து 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றாலும், அதற்கு தனி பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி கட்சிகளோடு இணைந்து ஆட்சியை பிடித்துள்ளது.

பாஜக கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோர் யாரை ஆதரிக்கிறார்களோ அந்த கூட்டணியே தற்போது ஆட்சியமைக்கும் சூழல் இருந்த நிலையில், அவர்கள் பாஜகவை ஆதரிக்கவுள்ளதாக அறிவித்தனர்.

அதே நேரம் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் மக்களவை சபாநாயகர் பதவியை கேட்டதாக கூறப்பட்டது. இதனால் அந்த பதவியை பாஜக தெலுங்கு தேசம் கட்சிக்கு வழங்குமா ? அல்லது தன்னிடமே வைத்துக்கொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில், சபாநாயகர் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி போட்டியிட்டால் அதற்கு இந்தியா கூட்டணி தனது ஆதரவை வழங்கும் என சிவசேனா (உத்தவ் ) எம்.பி சஞ்சய் ராவத் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "சபாநாயகர் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி தனது வேட்பாளரை நிறுத்த விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒருவேளை அது உண்மை என்றால், இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவை வழங்குவதை உறுதி செய்ய முயல்வோம். சபாநாயகர் பதவி பா.ஜ.க-விடம் சென்றால் அது தனக்கு ஆதரவு தந்த கட்சிகே துரோகம் செய்யும். அந்த அனுபவம் அந்த கட்சிக்கு உள்ளது"என்று கூறியுள்ளார்.

Also Read: தெலங்கானாவில் மாட்டிறைச்சி கடைகள் மீது பாஜகவினர் தாக்குதல் : மோதல் ஏற்பட்டதால் 144 தடை உத்தரவு !