Politics

பாஜக கூட்டணியில் தொடரும் முரண்பாடு... அஜித் பவார் குறித்து RSS பிரமுகர் கருத்தால் சலசலப்பு !

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி 234 இடங்களையும் பாஜக கூட்டணி 292 இடங்களையும் பிடித்துள்ளது. பாஜக தனித்து 240 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் தனி பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி கட்சிகளோடு இணைந்து ஆட்சியை பிடித்து, பிரதமராக மோடி 3-வது முறையாக பதவி வகிக்கிறார்.

எனினும் பாஜகவுக்கு இந்த தேர்தல் பெரும் பின்னடைவையே ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பாஜக மற்றும் அதன் கூட்டணி ஆளும் மாநிலங்களான உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பாஜகவுக்கு மக்கள் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்தனர். அதன் எதிரொலி, இந்த தேர்தலில் அம்மாநிலங்களில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.

மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி கட்சியான அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் (NCP) 4 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், வெறும் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. தொடர்ந்து மகாராஷ்டிராவின் உள் அரசியல் பிரச்னைகள் இருப்பதால், பாஜகவுக்கு அஜித் பவாரின் NCP ஆதரவு அளித்தது. ஆனாலும் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் இந்தியா கூட்டணி 30 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த சூழலில் அண்மையில் நடைபெற்ற பிரதமர் பதவியேற்பு விழாவின்போது, அஜித் பவாரின் NCP கட்சியின் எம்.பியான பிரஃபுல் படேலுக்கு பாஜக இணையமைச்சர் பதவி கொடுத்தது. ஆனால் தங்களுக்கு இணையமைச்சர் பதவி வேண்டாம் என்று மறுத்ததோடு, அமைச்சர் பதவிக்காக காத்திருப்பதாகவும் பிரஃபுல் படேல் தெரிவித்திருந்தார்.

இதுவே பாஜக கூட்டணியில் சற்று சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது பாஜகவின் ஒரு அங்கமாக பார்க்கப்படும் RSS அமைப்பை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். RSS அமைப்பின் முக்கிய பிரமுகரான ரத்தன் ஷர்தா, தனியார் ஊடகத்துக்கு பேட்டி ஒன்றை அண்மையில் கொடுத்திருந்தார்.

அந்த பேட்டியில், அதாவது அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடனான பாஜகவின் கூட்டணியால்தான், பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: உதவி கேட்டு வந்த சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் : POCSO வழக்கில் எடியூரப்பாவுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்!