Politics

NDA கூட்டணியில் முற்றுகிறது மோதல் : பா.ஜ.க மீது அஜித்பவார் கட்சி பரபரப்பு குற்றச்சாட்டு!

மகாராஷ்டிராவில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 4 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்தில் மட்டுமே வென்றது.

இதனையடுத்து, அக்கட்சியை சேர்ந்த பிரஃபுல் படேலுக்கு இணையமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டது. ஆனால், பா.ஜ.க வழங்கிய இணையமைச்சர் பதவியை ஏற்க அஜித் பவார் கட்சி மறுத்து விட்டதால், கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜார்க்கண்டில் முதலமைச்சராக இருந்த சிபுசோரன் மீதான கைது நடவடிக்கையால் மகாராஷ்டிராவில் பழங்குடியின மக்களின் வாக்குகள் கிடைக்காமல் போய்விட்டது என்று பா.ஜ.க. மீது அஜித் பவார் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

மும்பையில் நடைபெற்ற அக்கட்சியின் நிறுவன தின விழாவில் பேசிய மூத்த நிர்வாகி சகன் புஜ்பால், ”நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை பா.ஜ.க. மாற்ற முயற்சிப்பதாக பிரச்சாரத்தின்போது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதால், தங்களின் இடஒதுக்கீடு பறிபோய்விடுமோ என்று பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தினரிடையே அச்சம் ஏற்பட்டதாக” கூறினார்.

மேலும், ஜார்கண்டில் முதலமைச்சராக இருந்த சிபுசோரன் கைது செய்யப்பட்டதால், மகாராஷ்டிராவில் பழங்குடியின மக்களின் வாக்குகள் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளுக்கு கிடைக்காமல் போய்விட்டது என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஏற்கனவே, சிறுபான்மையினருக்கு எதிரான பா.ஜ.கவின் பிரச்சாரம் குறித்து அஜித்பவார் கட்சி அதிருப்தி தெரிவித்த நிலையில், தற்போது பா.ஜ.க. மீது மேலும் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. ஏற்கனவே, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு அஜித்பவார் பாராட்டு தெரிவித்திருந்த நிலையில், பா.ஜ.க. மீதான அஜித்பவார் கட்சியின் புதிய குற்றச்சாட்டால் தேசிய ஜனநாயக கூட்டணியில் பிளவு அதிகரித்துள்ளது.

Also Read: ஒன்றிய அரசு மீண்டும் ஓரவஞ்சனை: தமிழ்நாட்டிற்கு ரூ.5 ஆயிரம் கோடி - உ.பி-க்கு ரூ.25 ஆயிரம் கோடியா?