Politics

"எனக்கு அமைச்சர் பதவியே வேண்டாம்" - கேபினட் அமைச்சர் பதவி கிடைக்காததால் நடிகர் சுரேஷ் கோபி அதிருப்தி !

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற 18-வது மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை கடந்த ஜூன் 4-ம் தேதி நடைபெற்ற நிலையில், இதில் இந்தியா கூட்டணி 234 இடங்களையும் பாஜக கூட்டணி 292 இடங்களையும் பிடித்துள்ளது.பாஜக தனித்து 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றாலும், அதற்கு தனி பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி கட்சிகளோடு இணைந்து ஆட்சியை பிடித்துள்ளது.

பாஜக கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோர் யாரை ஆதரிக்கிறார்களோ அந்த கூட்டணியே தற்போது ஆட்சியமைக்கும் சூழல் இருந்த நிலையில். அவர்கள் பாஜகவை ஆதரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து நேற்று மோடி தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்றது. இதில் கூட்டணி கட்சிகளுக்கு ஏராளமான அமைச்சர் பதவிகள் ஒதுக்கப்பட்டன. பாஜகவின் முக்கிய தலைவர்களுக்குகூட இணையமைச்சர் பதவியே ஒதுக்கப்பட்டது. அந்த வகையில் கேரளாவில் இருந்து வெற்றிபெற்ற நடிகர் சுரேஷ் கோபி நேற்று ஒன்றிய இணையமைச்சராக பதவியேற்றார்.

அதனைத் தொடர்ந்து மலையாள ஊடகத்துக்கு பேட்டியளித்த அவர், தனக்கு அமைச்சராக தொடர்வதில் விருப்பம் இல்லை என்றும் தான் தொடர்ந்து நடிக்கவிரும்புவதாகவும் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், "தனக்கு அமைச்சர் பதவியில் விரும்பம் இல்லை என்று முன்னரே கட்சித் தலைமையிடம் முன்கூட்டியே கூறியிருந்தேன். எனினும் கட்சித் தலைமை கூறியதால் மட்டுமே பதவியேற்றுக் கொண்டேன்.

எனக்கு கோரிக்கையை ஏற்று அமைச்சர் பதவியில் இருந்து என்னை கட்சித் தலைமை விடுவிக்கும் என்று நம்புகிறேன். நான் ஏற்கனவே படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்திருப்பதால் அதனை தொடர விரும்புகிறேன். எம்.பி.யாக திருச்சூர் மக்களுக்கு தொடர்ந்து பணியாற்றுவேன்" என்று கூறியுள்ளார். ஆனால் சுரேஷ் கோபிக்கு கேபினட் அமைச்சர் பதவி ஒதுக்காத அதிருப்தியில்தான் அவர் அமைச்சர் பதவியில் இருந்து விலக விரும்பவதாக செய்திகள் வெளியாகியது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ‘இந்தியா’ கூட்டணி மகிழ்ச்சியோடு இருக்க காரணம் இதுதான் : மோடிக்கு முரசொலி பதிலடி!