Politics

"தமிழ் வாக்காளர்கள் மோடியின் பாசாங்குகளை நிராகரித்துள்ளனர்" - காங்கிரஸ் பொதுச்செயலாளர் கருத்து !

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் இந்தியா கூட்டணி 234 இடங்களையும் பாஜக கூட்டணி 292 இடங்களையும் பிடித்துள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

எனினும் பாஜக தனித்து 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றாலும், அதற்கு தனி பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி கட்சிகளோடு இணைந்து ஆட்சியை பிடிக்கும் நிலையில் உள்ளது. பாஜக கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோர் யாரை ஆதரிக்கிறார்களோ அந்த கூட்டணியே தற்போது ஆட்சியமைக்கும் சூழலில் அவர்கள் பாஜகவை ஆதரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதனால் கூட்டணி கட்சிகளின் தயவோடு பாஜக ஆட்சியில் அமரவுள்ளது. இந்த தேர்தலில் மிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் காசி தமிழ் சங்கமம், செங்கோல், தமிழ்நாட்டுக்கு மோடி அடிக்கடி வந்தது என இங்கு பாஜகவை வளர்க்க மோடி மேற்கொண்ட எந்த முயற்சியும் வெற்றிபெறவில்லை என்பது அம்பலமானது.

இதனை குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தமிழ் வாக்காளர்களும் உண்மையில் இந்தியாவின் வாக்காளர்களும் மோடியின் பாசாங்குகளை நிராகரித்துள்ளனர் என்று கூறியுள்ளார். இது குறித்து தனது சமூகவலைத்தளத்தில், மே 28, 2023 நினைவிருக்கிறதா? செங்கோலுடன் நரேந்திர மோடி புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்குள் நுழைந்த நாள் -

மோடி ஒரு பேரரசர் என்று நியாயப்படுத்துவதற்கு மட்டுமல்லாமல், தமிழ் வாக்காளர்களை ஈர்க்கவும், 15 ஆகஸ்ட் 1947 ஆம் ஆண்டு வரலாறு திரிக்கப்பட்டது.அந்த நாடகத்தின் முடிவு இப்போது எல்லோருக்கும் தெரியும். செங்கோல் என்பது தமிழர் வரலாற்றின் மதிப்பிற்குரிய அடையாளமாக உள்ளது, ஆனால் தமிழ் வாக்காளர்களும் உண்மையில் இந்தியாவின் வாக்காளர்களும் திரு. மோடியின் பாசாங்குகளை நிராகரித்துள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் அவர் அத்துமீறிய அரசியலமைப்புச் சட்டத்திற்கு அடிபணிய வேண்டிய நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளார்"என்று கூறியுள்ளார்.

Also Read: மோடி பேசும் பொய்கள் அளவு ஒருவரால் கற்பனை செய்யக்கூட முடியாது - சீத்தாராம் யெச்சூரி விமர்சனம் !