Politics

"இனி அரசியல் சாசனத்தை மோடி வணங்கித்தான் ஆக வேண்டும்"- ப. சிதம்பரம் !

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகம் சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான பா. சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வைத்ததற்காக மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.இந்தியா கூட்டணியிலேயே தமிழ்நாடு மட்டும்தான் நூற்றுக்கு நூறு என்ற மதிப்பெண் பெற்றிருக்கிறது.

இந்தியா கூட்டணி அகில இந்திய அளவில் 234 இடங்களை பெற்றிருக்கிறது. அது சாதாரண எண் அல்ல மிகப்பெரிய விஷயம்.பாஜக 400 இடங்களை இலக்காக வைத்து பாஜகவும் அதன் கூட்டணியும் 290 இடங்கள் மட்டுமே பெற்று மிகப்பெரிய சரிவை கண்டிருக்கிறது. இதன்மூலம் பாஜக பொய்யான பிரச்சாரங்களை செய்தது என்பது நிரூபணமாகி இருக்கிறது.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் ஒரு இடத்தில் தயாரிக்கப்பட்டு அனைவருக்கும் அனுப்பப்பட்டு சில தொலைக்காட்சிகளில் வெளியிட வைத்துள்ளது. தன்னை நேருவுடன் மோடி ஒப்பிட்டுக் கொள்கிறார். அதனை நாங்கள் நிராகரிக்கிறோம் இந்த நாட்டு மக்களும் அதனை நிராகரிப்பார்கள். குடிமகன் என்ற முறையில் அவரது அரசை வாழ்த்துகிறோம். எதிர்கட்சிகள் என்ற முறையில் அந்த அரசியல் செயல்பாடுகளை கண்டிப்பாக கண்காணிப்போம்.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை நாங்கள் நிராகரிக்கவில்லை. அதில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. 10-ல் நான்கு நபர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எதிர்க்கிறார்கள்.

இந்த தேர்தலில் தார்மீக வெற்றி காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. தார்மீக தோல்வி பிரதமர் மோடிக்கு ஏற்பட்டுள்ளது. நாங்கள் எங்கள் வெற்றியை கொண்டாடுவதில் பிரதமர் மோடிக்கு ஏன் பொறாமை? அவர் வேண்டுமானால் வெற்றியை கொண்டாட்டும்.

பிரதமர் மோடி குஜராத்தின் முதல்வராக இருந்த காலத்திலும், பிரதமராக இருந்த காலத்திலும் ஒற்றை மனிதர் ஆட்சி நடைபெற்று வந்தது. ஆனால் தற்பொழுது கூட்டணி சேர்த்து ஆட்சி அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அந்தக் ஆட்சி நிலையாக இருக்குமா என்பதை காலம் பதில் சொல்லும்.

இந்திய பொருளாதாரம் உயர்கிறது என்றால் இந்திய பொருளாதரத்திற்கு ஏற்ப பங்கு சந்தை உயர்ந்தால் ஏற்றுகொள்வோம். ஆனால் இந்திய பொருளாதாரத்தை விட பங்குச்சந்தை உயர்ந்தால் பங்குச்சந்தை வீக்கம் என்றுதான் கூற வேண்டும். அரசியல் சாசனத்தை காக்க மக்கள் இந்தியா கூட்டணிக்கு வாக்களித்து 240 இடங்களை தந்திருக்கிறார்கள். அதனால் இனி அரசியல் சாசனத்தை பிரதமர் மோடி வணங்கித்தான் ஆக வேண்டும். கூட்டணி அமைப்பது என்பது சாதாரண காரியம் அல்ல. அந்தந்த மாநில கட்சிகளுக்கு தனித்தனி வரலாறுகள் மற்றும் கொள்கைகள் உள்ளது. ஆகையால் கூட்டணி அமைப்பதும், கூட்டணி அரசு நடத்துவதும் கடினமான காரியம்"என்று கூறியுள்ளார் .

Also Read: "இஸ்லாமிய இடஒதுக்கீடு நீடிக்க வேண்டும்"- தெலுங்கு தேசம் கட்சி உறுதி... அதிர்ச்சியில் பாஜக தலைவர்கள் !