Politics

மாற்ற நினைத்த அரசியல் சாசனம் : மோடியை வணங்க வைத்த இந்தியா கூட்டணி!

பன்முகத்தன்மை கொண்ட இந்திய நாட்டை இந்து இராஷ்டிரியமாக மாற்ற வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் கடந்த 10 ஆண்டுகளாக மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சி செய்து வந்தது.

2019 ஆம் தேர்தலில் 303 தொகுதிகளில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்து அராஜக அரசியலை வெளிப்படுத்தியது. நாடாளுமன்றத்திலேயே ஜனநாயகம் இல்லாத அளவிற்கு எதிர்க்கட்சிகளின் குரல்களை மோடி அரசு ஒடுக்கியது.

மேலும் நாட்டு மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்கி வரும் அரசியல் சாசனத்தையே மாற்ற வேண்டும் என்று பா.ஜ.க தலைவர்கள் கங்கனம் கட்டிக் கொண்டு திரிந்தனர்.

இதன் வெளிப்பாடுதான் பிரதமர் மோடியே தேர்தல் பிரச்சாரங்களில் இந்து - முஸ்லிம் பிரிவினை குறித்து பேசி வந்தது. இதை முன்கூட்டியே உணர்ந்து கொண்ட எதிர்க்கட்சிகள், இந்தியா கூட்டணியை உருவாக்கித் தேர்தலில் களம் கண்டனர்.

இந்த இந்தியா கூட்டணியால்தான், பா.ஜ.கவால் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாமல் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி கட்டிலில் அமர்கிறது. இந்த ஆட்சியும் ஐந்து ஆண்டுகளுக்கு அப்படியே தொடரும் என்பது நிச்சயம் கஷ்டமான ஒன்றுதான்.

கூட்டணிக் கட்சிகள் பா.ஜ.க கூட்டணியிலிருந்து வெளியே வந்துவிட்டால் ஆட்சி கவிழ்ந்து விடும். இந்த இக்கட்டான ஒரு சூழ்நிலையில்தான் பா.ஜ.க மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கப் போகிறது.

இந்நிலையில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் பா.ஜ.க எம்.பிக்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் எதை மாற்ற வேண்டும் என நினைத்து தேர்தலில் பிரச்சாரம் செய்தார்களோ அந்த அரசியல் அமைப்பு சட்டத்தையே இன்று நரேந்திர மோடி வணங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்குக் காரணம் இந்தியா கூட்டணிதான். ஒவ்வொரு தேர்தல் பிரச்சாரங்களின் போதும் அரசியல் அமைப்பின் முக்கியத்துவத்தை ராகுல் காந்தி இந்த நாட்டு மக்களுக்கு எடுத்துரைத்தார். தற்போது வேறு வழி இல்லாமல் அழிக்க வேண்டும் என நினைத்த அரசியல் அமைப்பு சட்டத்தையே இன்று மோடி வணங்கி இருக்கிறார்.

Also Read: ஆட்சியை தக்கவைத்தாலும், அடி பெரியது! : பா.ஜ.க இழந்த 19 ஒன்றிய அமைச்சர்கள்!