Politics

தேர்தல் ஜனநாயகத்தை நிலை நிறுத்த உரிய நடவடிக்கை வேண்டும் - முன்னாள் நீதிபதிகள் கூட்டாக கடிதம் !

நாடு முழுவதும் 7 கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்கள் பேசிய வெறுப்பு பேச்சுகள் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

குடியரசுத்தலைவர் , உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, தலைமை தேர்தல் ஆணையர் உள்ளிட்டோருக்கு உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகளான ஜி.எம். அக்பர் அலி, அருணா ஜெகதீசன், D. அரிபரந்தாமன், P.R. சிவக்குமார், C.T. செல்வம், எஸ்.விமலா மற்றும் பாட்னா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அஞ்சனா பிரகாஷ் ஆகியோர் சேர்ந்து இந்த கடிதத்தை எழுதியுள்ளனர்.

குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி D.Y. சந்திர சூட் மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜூவ் குமார் ஆகியோருக்கு எழுதப்பட்டுள்ள அந்த கடிதத்தில் " நடந்து முடிந்த தேர்தலின் நம்பகத்தன்மை குறித்து பல கேள்விகள் எழுகிறது. பல புகார்கள் குறித்து கவனத்திற்கு கொண்டு வந்தும் அது தொடர்பாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை.

எந்த தேர்தலிலும் இல்லாத வகையில் இந்த தேர்தலில் சிறுபான்மையினருக்கு எதிராக அதிகளவில் வெறுப்பு பேச்சுகள் பேசப்பட்டும், அதற்கெதிராக குறைந்தபட்ச நடவடிக்கையே எடுக்கப்பட்டது.ஒருவேளை தொங்கு நாடாளுமன்றம் அமைந்தால் குதிரை பேரம் உள்ளிட்ட அரசியல் சாசனத்திற்கு எதிரான நடவடிக்கைகளை தடுக்க குடியரசுத்தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் அதில் உடனடியாக தலையிட தலைமை நீதிபதி தயாராக இருக்க வேண்டும். தேர்தல் முடிவுகள் காரணமாக ஏதேனும் அரசியல் சாசன சிக்கல்கள் எழுந்தால் அதை சரி செய்ய ஐந்து நீதிபதிகள் நீதிமன்றத்தில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

Also Read: "நாளை இந்தியா கூட்டணியின் வெற்றியை கொண்டாட எதிர்நோக்கியுள்ளோம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !