Politics

"நாளை இந்தியா கூட்டணியின் வெற்றியை கொண்டாட எதிர்நோக்கியுள்ளோம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

தமிழ்நாடு அரசியல் வரலாற்றிலும் தேசிய அரசியலிலும் அரை நூற்றாண்டுக்கு மேலாக தனிப் பெரும் தலைவராக விளங்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர். 5 முறை முதலமைச்சராக இருந்து நவீன தமிழ்நாட்டை உருவாக்கியதில் அதன் சிற்பியாக விளங்கியவர். இன்று முத்தமிழறிஞர் கலைஞரின் 101 ஆவது பிறந்த நாள் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அவரின் பிறந்தநாளை முன்னிட்டு பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நூற்றாண்டு நிறைவில் பெற்ற புது உத்வேகத்துடன் நாளை (ஜூன்-4) நமது கூட்டணியின் வெற்றியை, இந்திய மக்களுக்கான வெற்றியைக் கொண்டாட எதிர்நோக்கியுள்ளோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "சோனியா காந்தி அம்மையார், எனது அன்புச் சகோதரர் ராகுல் காந்தி, மரியாதைக்குரிய பரூக் அப்துல்லா, மரியாதைக்குரிய தோழர்கள் சீதாராம் யெச்சூரி, டி. ராஜா உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் தலைநகர் டெல்லியில் ஒன்றுகூடி முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவில் இதயப்பூர்வமான மரியாதை செலுத்திய இந்நாளில், அவரை ஒரு மாநிலத் தலைவராக மட்டுமின்றி தேசிய அளவிலான தலைவராகப் போற்றி வணங்குகிறோம்!

கூட்டாட்சியியல் மற்றும் மக்களாட்சிக்காகத் தொடர்ந்து உறுதியாகக் குரல்கொடுத்த தலைவர் கலைஞர் அவர்கள் தேசக் கட்டுமானத்தில் மிக முக்கியப் பங்காற்றியுள்ளார். நெருக்கடியான காலங்களில், ஒன்றிய அளவில் நிலையான ஆட்சி தொடர்வதை உறுதிசெய்துள்ளார். பல பிரதமர்கள், குடியரசுத் தலைவர்களை முடிவு செய்வதில் முக்கியப் பங்குவகித்து இந்தியாவின் அரசியல் நிலப்பரப்பை பக்குவமாக வடிவமைத்தவர் அவர்.

அவரது நூற்றாண்டு நிறைவில் பெற்ற புது உத்வேகத்துடன் நாளை (ஜூன்-4) நமது கூட்டணியின் வெற்றியை, இந்திய மக்களுக்கான வெற்றியைக் கொண்டாட எதிர்நோக்கியுள்ளோம்"என்று கூறியுள்ளார். நாளை நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், முதலமைச்சரின் இந்த பதிவு வெளியாகியுள்ளது.

Also Read: ”வானத்தை ஆளும் சூரியன் கலைஞர் ” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!