Politics

கடவுளால் அனுப்பப்பட்டவரிலிருந்து, கடவுள்களின் அரசராக மாறிய மோடி : பா.ஜ.க தலைவர் நட்டா பேச்சால் சர்ச்சை!

சாதியையும், சனாதனத்தையும், மதத்தையும் மட்டுமே வைத்து அரசியல் செய்து வந்த பா.ஜ.க.வினர், தற்போது ஒருபடி மேல் சென்று கடவுளை வைத்து அரசியல் செய்ய துணிந்திருக்கின்றனர்.

கடவுளின் ஆசி பெற்றவர்கள் பா.ஜ.க.வினர் என்ற பிரச்சாரம், காலப்போக்கில் கடவுளால் அனுப்பப்பட்டவர் மோடி என்று மாறி, தற்போது, கடவுள்களுக்கெல்லாம் அரசரே மோடி தான் என்கிற அளவிற்கு திரிந்துள்ளது.

இது போன்ற பொய்களும், புரட்டல்களும், நாளுக்கு நாள் அதிகரிக்க, அதற்கு முட்டுக்கட்டை போட வேண்டிய பா.ஜ.க தலைவர்களே, பொய், புரட்டல்களை முன்வைப்பதில் கண்ணும் கருத்துமாய் செயல்பட்டு வருகின்றனர்.

அவ்வாறு, பொது மேடையில், பா.ஜ.க தலைவர் நட்டா பேசியது தான், ‘நரேந்திர மோடி மக்களுடைய அரசர் மட்டுமல்ல. கடவுள்களுக்கெல்லாம் அவர் தான் அரசர்’ என்ற கூற்று.

கடந்த மாதம் தான், ‘கடவுள் புரி ஜகன்னாதரே, மோடியின் சீடர் தான்’ என பா.ஜ.க தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்தற்கே கண்டனங்கள் குறையாத நிலையில், மேன்மேலும் மோடியை கடவுளாக சித்தரிப்பது கடும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

அது மட்டுமல்லாமல், இது போன்ற முன்மொழிவுகள், தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிராக இருக்கும் நிலையிலும், அதனை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கும் கண்டனங்கள் எழுந்த வண்ணம் உள்ளது.

இதனையடுத்து, மக்கள் மதத்தின் மீதும், கடவுளின் மீதும் அபரிவிதமான நம்பிக்கையை கொண்டுள்ளதை தனக்கு சாதகமாக பயன்படுத்தும் பா.ஜ.க.வின் நடவடிக்கை எவ்விதத்திலும் சரி அல்ல என எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.

Also Read: மோதிக்கொள்ளும் மோடி - அதானி : தோல்வி பயத்தால் வந்த பிரிவா?