Politics

"மதவாதம் மக்களிடையே எடுபடாததால் இனவாத பேச்சுகளை பேசுகிறார்கள் பாஜகவினர்" - திருமாவளவன் விமர்சனம் !

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் அனைத்திந்திய பாங்க் ஆஃப் பரோடா ஒபிசி தொழிலாளர்கள் நலன் கூட்டமைப்பின் சார்பில் 8-ஆவது ஓ.பி.சி. அனைத்திந்திய கருத்தரங்கம் நடைபெற்றது.இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன், ஓ பி சி கூட்டமைப்பின் தலைவர் அமித் ஜாதவ் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.

பின்னர் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஓபிசி சமூகத்தினரை மதத்தின் பெயரால் வெறும் வாக்கு வங்கியாக மட்டும் பயன்படுத்தக்கூடியதுதான் பாஜக அரசு என்பதை அனைவரும் அறிவோம். இந்த சூழலில் எஸ்சி,எஸ்டி,ஓபிசி மற்றும் சிறுபான்மையினர் ஆகிய பகுஜன் சமூகத்தினர் ஒற்றுமையாக இருப்பது முக்கியமானது.

இட ஒதுக்கீட்டுக்கும், சமூகநீதி கோட்பாட்டிற்க்கும் எதிரானவர்கள் இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து நாட்டையும், சமூகநீதி கோட்பாட்டையும் காப்பாற்ற வேண்டும் என்பதை இந்த மாநாட்டில் நான் வலியுறுத்தி உள்ளேன். ஓபிசி சமூகத்தினரின் இட ஒதுக்கீட்டிற்காகவும், பகுஜன் ஒற்றுமைக்காகவும் போராடிய முன்னால் பிரதமர் வி பி சிங்கையும், கான்ஷியராம், விபி மண்டல் போன்றவர்களையும் நாம் மறந்துவிடக்கூடாது.

ஒவ்வொரு கட்ட தேர்தலின் போதும் பிரதமர் மோடி ஆற்றுகின்ற உரையை வைத்தே மக்கள் யாருக்கு ஆதரவாக வாக்களித்தார்கள் என்பதை உணர முடிகிறது. பிரதமர் மோடி அண்மை காலமாக பேசி வருகிற கருத்துகள் அவர் மிகவும் பதட்டத்திலும், தோல்வி பயத்திலும் இருக்கிறார் என்பதை உணர்த்துகிறது.

குறிப்பாக இந்து சமூகத்தின் நிலை குறித்தும், ராமர் கோவிலை புல் டவுசர் வைத்து இடித்து விடுவார்கள் எச்சரிக்கையாக இருங்கள் என்று சொல்கிறார். அதோடு அமித் ஷா போன்றவர்கள் பேசி வருகிற கருத்துகளையும் வைத்தே அவர்கள் ஒவ்வொரு கட்டத் தேர்தலிலும் பதட்டத்திற்கு உள்ளாகி வருகிறார்கள் என்பதை உணர்த்துகிறது.

ஆகவே ஜூன் 4 ஆம் தேதி வெளியாக இருக்கின்ற தேர்தல் முடிவுகள் பாஜக ஆட்சியின் 10 ஆண்டு கால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறேன். பாஜகவினர் மக்களிடம் மதவாதத்தை பேசி எடுபடவில்லை என்பதால் தற்போது இனவாதத்தை பேசி வருகிறார்கள். அது அவர்களுக்கு எதிராக தான் முடியும்"என்று கூறினார்.

Also Read: பிரதமர் மோடியின் நிகழ்ச்சிக்கான செலவை மாநில அரசே ஏற்கவேண்டும் : கர்நாடக அரசை ஏமாற்றிய ஒன்றிய அரசு !