Politics

பிரதமர் மோடியின் நிகழ்ச்சிக்கான செலவை மாநில அரசே ஏற்கவேண்டும் : கர்நாடக அரசை ஏமாற்றிய ஒன்றிய அரசு !

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், வன மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் சார்பில் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தின் 50 ஆம் ஆண்டு பொன்விழா கடந்த ஆண்டு நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக வந்த பிரதமர் மோடி மைசூரில் உள்ள நட்சத்திர தனியார் விடுதியில் தங்கினார்.

பின்னர் பந்திப்பூர் புலிகள் காப்பதற்கு சென்று 20 கிலோ மீட்டர் பிரதமர் மோடி ஜீப் சவாரி செய்தார்.இந்த நட்சத்திர விடுதியில் பிரதமர் மோடி 3 நாட்கள் தங்கினார். இதற்கான கட்டணம் ரூ.80 லட்சம் என்று கூறப்படுகிறது. இதனிடையே பிரதமர் மோடி மூன்று நாட்கள் தங்கியதற்கான விடுதி கட்டணம் ரூ.80 லட்சம் செலுத்தப்படவில்லை என ஹோட்டல் நிர்வாகம் கூறியது.

மேலும் ஜூன் 1-ம் தேதிக்குள் வாடகை பாக்கியை செலுத்தாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஹோட்டல் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்தது. இது இந்திய அளவில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு மாநில அரசை ஏமாற்றியுள்ளது அம்பலமாகியுள்ளது.

பிரதமர் மோடி பங்கேற்கும் இந்த நிகழ்ச்சிக்கான தொகையை ஏற்பதாக ஒன்றிய அரசு மாநில வனத்துறைக்கு உறுதியளித்துள்ளது. 3 கோடி ரூபாய்க்குள் இந்த செலவை முடிக்க திட்டமிட்டிருந்த நிலையில், நிகழ்ச்சிக்கு 6 கோடி ரூபாய் வரை செலவாகியுள்ளது.

ஆனால், 3 கோடி ரூபாய் மட்டுமே தருவோம் என்றும், மீதம் உள்ள தொகையை மாநில அரசே செலுத்தவேண்டும் என்றும் பின்னர் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. நிலுவை தொகை குறித்து மாநில அரசு சார்பில் ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்ட கடிதத்துக்கு ரேடிசன் ப்ளூ பிளாசா ஹோட்டலில் மோடி வந்து சென்றதற்கான செலவை மாநில அரசுதான் செலுத்த வேண்டும் என ஒன்றிய அரசு பதில் கடிதம் எழுதியுள்ளது.

ஆனால், அதன் பின்னர் மாநில அரசு அனுப்பிய கடிதத்துக்கு தற்போதுவரை ஒன்றிய அரசு எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. இதன் காரணமாக ரேடிசன் ப்ளூ பிளாசா ஹோட்டலுக்கு செலுத்தவேண்டிய தொகை நிலுவையில் வைக்கப்பட்டிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: மகாராஷ்டிரா பாடத்திட்டத்தில் பகவத் கீதை, மனுதர்மம் : கடும் எதிர்பால் பின்வாங்கிய மாநில கல்வித்துறை !