Politics

"குஜராத்துக்காக தமிழ்நாடு கொள்ளையடிக்கப்படுகிறது" - சபாநாயகர் அப்பாவு விமர்சனம் !

நெல்லை அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ஒடிசா மாநிலம் பூரி ஜெகநாதர் கோயில் சாவி தமிழ்நாட்டில் இருப்பதாக பிரதமர் தேர்தல் பரப்புரையின் போது பேசிய விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், "பிரதமர் மோடி அப்படி பேசி இருக்க வேண்டாம்.தமிழ்நாடோ, தமிழ்நாட்டு மக்களோ வேறு இடங்களிலிருந்து கொள்ளையடிக்க வேண்டும் என்றோ கொள்ளையடித்து கொண்டு வர வேண்டும் என்று அதை பாதுகாக்கின்ற அரசாகவோ தமிழ்நாடு இல்லை.

தமிழகத்தில் உள்ள தொழில்கள், முதலீடுகள்தான் கொள்ளை அடிக்கப்பட்டுதான் குஜராத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கின்றது.தூத்துக்குடி துறைமுகத்தில் பருப்பு இறக்குமதி செய்யப்பட்டு பல்லாயிரம் பேர் வேலை வாய்ப்பு பெற்றனர். தற்போது பருப்பு இறக்குமதி செய்யும் வாய்ப்பை தூத்துக்குடி துறைமுகத்திற்கு மறுக்கப்பட்டு குஜராத் மாநிலம் அதானி துறைமுகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூரில் தொழிற்சாலைகள் கடும் நெருக்கடி உள்ளாக்கப்பட்டு குஜராத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 22 முதலாளிகளுக்கு 16 லட்சம் கோடி கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் ஒருவர் கூட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் கிடையாது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு தொழிலதிபருக்கு கூட ஒரு ரூபாய் கூட கடன் தள்ளுபடி செய்யவில்லை விவசாயிகளுக்கு மாணவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. கடன் தள்ளுபடி செய்து பயன்பெற்ற 22 பேரும் குஜராத்தை சேர்ந்தவர்கள். வங்கிகள், தொழில்கள் கொள்ளையடித்து குஜராத்திற்கு கொண்டு சென்று உள்ளது. தமிழ்நாட்டு மக்கள் படிப்பில் சிறந்தவர்கள் சமூக நீதியில் சிறப்பான அரசு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது"என்று கூறினார்.

Also Read: ”குரங்கு கையில் பூமாலை போல் ஆகிவிட்ட ஆளுநர் பதவி" : ஆர்.என்.ரவிக்கு அமைச்சர் ரகுபதி கண்டனம்!