Politics

பதவியின் மாண்பை மீறும் ஆளுநர்... மேற்கு வங்க ஆளுநர் மீது தேர்தல் ஆணையத்தில் பரபர புகார் !

மேற்கு வங்க மாநிலத்தில் ஆளுநராக இருப்பவர் சி.வி.அனந்த போஸ். இவர் அம்மாநில அரசுக்கு தொடர்ந்து பல்வேறு இடையூறு கொடுத்ததன் மூலம் நாடு முழுவதும் பிரபலமானவராக அறியப்பட்டவர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் பெண் ஒருவர், சி.வி.ஆனந்த போஸ் மீது பரபரப்பான புகார் ஒன்றை அளித்தார்.

தனக்கு நிரந்தர பணி தருவதாகவும், தன்னை சிறப்பாக கவனித்துக்கொள்வதாக பேசி, தன்னிடம் ஆளுநர் அத்துமீற முயன்றதாகவும் பாலியல் ரீதியாக தனக்கு தொல்லை கொடுத்ததாகவும் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார். பணிப்பெண் அளித்த இந்த புகார் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த விவகாரமே இன்னும் ஓயாத நிலையில், மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் சி.வி.ஆனந்த போஸ். அண்மையில் வெளியான வீடியோவில் சி.வி.ஆனந்த போஸ், தாமரை பொறித்த சின்னதை தனது சட்டையில் அணிந்தபடி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார். இந்த வீடியோ வெளியாகி பலர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பியது.

ஒரு ஆளுநர் எந்த கட்சியின் பிரதிபலிப்பாகவும் இருக்க கூடாது என்பது நியதி. ஆனால் பாஜக ஆட்சியில் உள்ள ஆளுநர்களோ பாஜகவின் செய்தி தொடர்பாளர் போலவும், பாஜக தலைவர்கள் போலவும் செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக பாஜக ஆளாத மாநிலங்களில் அம்மாநில அரசுக்கு மிகுந்த குடைச்சல் கொடுத்து வருகின்றனர்.

உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என அனைத்தும் ஆளுநர்களுக்கு குட்டு வைத்தாலும், திருந்துவதாக தெரியவில்லை. மாறாக நீதிமன்றத்தையும் அவமதித்து, தங்கள் போக்கை நாங்கள் தொடர்வோம் என்ற தொனியில் இருக்கின்றனர். அந்த வகையில் சி.வி.அனந்த போஸ்ஸும், நிகழ்ச்சி ஒன்றில் பாஜக சின்னத்தை வைத்து, அவர் பாஜகவின் பிரதிநிதி போல் கலந்துகொண்டார்.

இந்த வீடியோவுக்கு கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. அந்த புகாரில், இந்த ஆண்டு ஜனவரியில் கொல்கத்தாவில் அமைந்துள்ள இராமர் கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பாஜகவை பிரதிநிதி படுத்தியதாகவும், தனது ஆளுநர் பதவியை அவர் தவறான முறையில் கையாண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்குகளைக் கோருவதற்காக, பாஜக சின்னத்தை அவர் தனது சட்டையில் அணிந்துள்ளதாகவும், ஜனநாயகமற்ற முறையில் நடந்துகொண்ட ஆளுநர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இதற்கு முன்பாக விதிகளை மீறி செயல்பட்ட ஆளுநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பட்டியலிட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: பனியன் நிறுவனத்தில் தையல் இயந்திரங்களை திருடிய பாஜக நிர்வாகி... அதிரடியாக கைது செய்த போலீஸ்!