Politics

மிரட்டலா? அல்லது பதவி ஆசையா? : பா.ஜ.க.விற்கு இழுக்கப்பட்ட எதிர்க்கட்சி தலைவர்கள்!

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், பா.ஜ.க முன்னிறுத்தியுள்ள வேட்பாளர்களில் 4-ல் ஒரு பங்கு வேட்பாளர்கள், கடந்த 10 ஆண்டுகளில் பா.ஜ.க.வில் இணைந்தவர்கள் என்பது அம்பலப்பட்டுள்ளது.

அதாவது, பா.ஜ.க முன்னிறுத்தியுள்ள 435 வேட்பாளர்களில் 106 வேட்பாளர்கள் கடந்த 10 ஆண்டுகளில், மற்ற கட்சிகளிலிருந்து பா.ஜ.க.வில் இணைந்தவர்கள் அல்லது இணைக்கப்பட்டவர்கள்.

இது மொத்தத்தில் 24% ஆக இருக்கிறது. இந்த 106-ல் 90 வேட்பாளர்கள் கடந்த 5 ஆண்டுகளில் பா.ஜ.க.வில் இணைந்தவர்கள்.

இவர்களில் பலர், பா.ஜ.க.வின் கருத்தியலை ஏற்றுக்கொண்டு இணைந்தவர்களோ, சரியான அரசினை நிறுவிட வேண்டும் என்ற ஆசையிலோ இணைந்தவர்கள் அல்ல என்பது பல ஆய்வுகளின் அம்பலப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த காலங்களில் பா.ஜ.க.வை கடுமையாக விமர்சித்தவர்களும், பா.ஜ.க.வால் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர்களும், தற்போது பா.ஜ.க.வில் தான் இருக்கிறார்கள் என்பது Indian Express, Times of India உள்ளிட்ட ஊடகங்கள் நடத்திய ஆய்வுகள் வழி அம்பலப்பட்டுள்ளது.

அவ்வாறு ஓரிரு மாதங்களுக்கு முன், Indian Express நாளிதழ், மகாராஷ்டிர மாநிலத்தின் துணை முதல்வர் அஜித் பவார் உள்ளிட்ட 23 பேர் தங்கள் மீது உள்ள ஊழல் வழக்கிலிருந்து தப்பித்துக்கொள்ளவே, பா.ஜ.க.வில் இணைந்ததை புள்ளிவிவரத்துடன் வெளிக்காட்டியது.

அவ்வரிசையில் தற்போது, Times of India நாளிதழ், உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க.வினால் முன்னிறுத்தப்பட்ட 23 வேட்பாளர்கள், தெலங்கானாவின் 11 பா.ஜ.க வேட்பாளர்கள் மற்றும் மேற்கு வங்கத்தின் 10 வேட்பாளர்கள் உள்ளிட்ட வேட்பாளர்கள் மற்ற கட்சிகளிலிருந்து பா.ஜ.க.வில் இணைக்கப்பட்டவர்கள் என தெளிவுபடுத்தியுள்ளது.

குறிப்பாக, பஞ்சாப்பில் முன்னிறுத்தியுள்ள பாதிக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் மற்றக் கட்சியிலிருந்து அண்மையில் பா.ஜ.க.வில் இணைந்தவர்களே.

தமிழ்நாட்டில் முன்னிறுத்தப்பட்ட வேட்பாளர்களில் 26% பேர் மற்றக் கட்சியிலிருந்து இணைந்தவர்களே.

இவ்வாறு, மற்ற கட்சியினருக்கு பதவி ஆசையைக் காட்டி அல்லது மிரட்டி, தனது கட்சிக்குள் சேர்க்கப்படும் தலைவர்கள், வெகுகாலம் கட்சியில் நீடிக்கப்போவதில்லை என்பதை பா.ஜ.க உணரவேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் தங்களது கண்டனங்களை முன்வைத்து வருகின்றனர்.

Also Read: தோல்வி பயத்தால் நீதிமன்றத்தில் பின் வாங்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு : விடுவிக்கப்படும் ஊடகவியலாளர்கள்!