Politics

முதலில் எய்ம்ஸ், இப்பொது சென்னை மெட்ரோ : தமிழ்நாட்டுக்கு மட்டும் நிதி ஒதுக்க மறுக்கும் ஒன்றிய பாஜக அரசு !

தமிழ்நாடு அரசும் ஒன்றிய அரசும் இணைந்து கூட்டு முயற்சி அடிப்படையில், 50:50 என்ற சமபங்கு வீதத்தில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் உருவாக்கப்பட்டு சென்னையின் முதற்கட்டப் மெட்ரோ பணிகள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ரூ.63,246 கோடி செலவில், 119 கிலோமீட்டர் நீளமுள்ள மேலும் மூன்று வழித்தடங்களைக் கொண்ட இரண்டாம் கட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒன்றிய அரசின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது..

அதனைத் தொடர்ந்து ஒன்றிய அரசின் அனுமதியும் இதற்கு வழங்கப்பட்ட நிலையில், கடந்த 2020 அன்று சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. தொடர்ந்து 2021-22 நிதிநிலை அறிக்கையில் சென்னை மெட்ரோ பணிகளுக்கு ஒன்றிய அரசு சார்பில் நிதியுதவி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், தற்போதுவரை ஒன்றிய அரசு சென்னை மெட்ரோ பணிகளுக்கு நிதி ஒதுக்காத நிலையில், தமிழ்நாடு அரசே முழு செலவையும் ஏற்றுக்கொண்டு மெட்ரோ பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகளுக்கு மட்டும் ஒன்றிய அரசு இதுவரை நிதி ஒதுக்காத அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

2021-22 நிதிநிலை அறிக்கையில் சென்னை, கொச்சி, பெங்களூரு, நாக்பூர் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதாக ஒன்றிய அரசு அறிவித்திருந்தது. அதில் கொச்சி, பெங்களூரு, நாக்பூர் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கிய நிலையில், சென்னை மெட்ரோ பணிகளுக்கு மட்டும் ஒன்றிய அரசு நிதி ஒதுக்கவில்லை என்ற தகவல் RTI மூலம் வெளியாகியுள்ளது. இந்திய ஒன்றியத்துக்கு அதிக நிதியளிக்கும் தமிழ்நாட்டை ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவது தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அக்பர்பூர் பெயர் மாற்றப்படும் : யோகி ஆதித்யநாத் பிரச்சாரத்தால் அதிர்ச்சி!